
‘’வேகவைத்த பூண்டு மற்றும் வெந்நீர் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வராமல் பாதுகாக்க முடியும்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’கொரோனா வைரஸ் தாக்காமல் தடுக்க, பூண்டை வேக வைத்துச் சாப்பிடுவதோடு, அது வேகவைக்கப்பட்ட நீரையும் வடிகட்டி குடிக்க வேண்டும்,’’ என்று விரிவாக செய்முறை ஒன்றை எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
பொதுவாக, ஆயுர்வேத மருத்துவத்தின் படி, பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான். ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் ஒருவித இயற்கை மருத்துவம் இருக்கும். அவற்றை நாம் முற்றிலுமாக குறை சொல்லிவிட முடியாது.
அதுபோலத்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், பூண்டை வேக வைத்து சாப்பிடுவதோடு, அந்த நீரையும் குடித்தால் கொரானா வராமல் தடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதுபற்றி நமக்கு தெரிந்த ஆயுர்வேத நிபுணர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ‘’பூண்டு சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய விசயம்தான். எனினும், அதனால் கொரோனா வைரஸ் கட்டுப்படுமா என்று தெரியவில்லை. இதுகுறித்து எந்த நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளும் வெளியாகவில்லை. தற்போது நிலவும் பரபரப்பான சூழலில் இதுபோன்ற தகவல்களை முழு உண்மை என நம்பிச் செயல்படுவது உயிருக்கு ஆபத்தையே ஏற்படுத்தும். தேவை ஏற்படின் உரிய மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நலம்,’’ என்றனர். மேலும், தற்போதைய சூழலில் தங்களது பெயரை வெளியிடுவது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டனர்.
எனவே, பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தருகிறது என்றாலும், குறிப்பாக அவை கொரோனாவை தடுக்கின்றன என்று சொல்வது ஏற்புடையதல்ல என தெளிவாகிறது.
ஏற்கனவே, இதுதொடர்பாக நமது இலங்கை பிரிவினர் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, இது மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய ஒன்று என நிரூபித்துள்ளனர்.
Fact Crescendo Srilanka Link
இதேபோல, பிபிசி, ஸ்னோப்ஸ் போன்ற இணையதளங்களும் இதுபற்றி செய்தி வெளியிட்டிருக்கின்றன.
BBC Link | Snopes.com Link |
இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) மண் சார்ந்த ஆயுர்வேத மருத்துவக் குறிப்பு என்ற முறையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் ஓரளவு உண்மை உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது மட்டுமே முழு உண்மையாகிவிடாது, கொரோனாவை தடுக்க பூண்டு மட்டும் போதாது. இதற்கு உரிய மருத்துவ பரிசோதனை அவசியமாகும்.
2) பூண்டு போன்றவற்றை சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அதற்காக, எந்த நோயும் வராமல் இவற்றால் தடுக்க முடியும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது.
3) மக்கள் இதுபோன்ற ஃபார்வேர்ட் மெசேஜ்களை முழுவதும் உண்மை என நம்ப வேண்டாம். கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் சூழலில், மக்கள் உரிய மருத்துவ பரிசோதனையை செய்துகொள்ள வேண்டுகிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:வேகவைத்த பூண்டு மற்றும் வெந்நீர் கொரோனா வைரஸ் வராமல் தடுக்குமா?
Fact Check By: Pankaj IyerResult: False
