
‘’மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி பிரச்னையால் 3 பேர் மீது கொடூர தாக்குதல்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:
விகடன் இணையதளம் குறிப்பிட்ட செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மே 25ம் தேதி வெளியிடப்பட்ட அந்த செய்தியின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். இதன்படி, மத்திய பிரதேசம் மாநிலத்தின் சியோனி பகுதியில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் ஆட்டோவில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வதாக, தகவல் பரவியுள்ளது. அவர்களை பசுக் காவலர்கள் வழிமறித்து, கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோவை, அவர்களில் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிர, அது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தியில் கூறியுள்ளதுபோல, ஏதேனும் சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்ததா, என தேடிப் பார்த்தோம். அப்போது, மே24ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறி, அதற்கான செய்தி மற்றும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்தன.

இதுபற்றி ஓவைசி வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
இதன்படி, The Scroll வெளியிட்ட செய்தி ஆதாரத்தை ஆய்வு செய்தோம். அதில், இந்த சம்பவம் மே 24ம் தேதி நிகழ்ந்தது என்றும், இதன்பேரில் சியோனி மாவட்ட ஸ்ரீ ராம் சேனா அமைப்பின் தலைவர் பாகல் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, தாக்குதலுக்கு உள்ளான 3 பேரும் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகவும் கூறி, கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் அவர்களுக்கு மாட்டிறைச்சி விநியோகித்ததாகக் கூறி, மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, The Scroll வெளியிட்ட செய்தி ஆதாரத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட விகடன் செய்தி உண்மையானதுதான் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் செய்தி உண்மையான தகவல்தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அரசியல் சூழலின் அடிப்படையில், இந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்றும் தெரியவருகிறது.

Title:மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாகக் கூறி மத்திய பிரதேசத்தில் 3 பேர் மீது கொடூர தாக்குதல்!
Fact Check By: Parthiban SResult: True
