FACT CHECK: பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் பழைய படம்!
பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இது பால் தினகரன் வீட்டில் கைப்பற்றிய பணம்... டேய் வாட்டிகன் பாய்ஸ் இது எப்படி இருக்கு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை வரை ஆடு என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜனவரி 22ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவர் ரூ.1000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி ஊடகங்களில் தொடர்ந்து பல செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், பால் தினகரனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. சேகர் ரெட்டி வீட்டில் ரூ.170 கோடி பணமும் 130 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது என்ற போது அறை முழுக்க கட்டுக்கட்டாக பணம் இருக்கும் படம் வெளியானது. இங்கே, 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்றபோது கைப்பற்றப்பட்ட பணம் மிகக் குறைவாக உள்ளதே என்ற சந்தேகத்தின் பேரில் இந்த புகைப்படம் பால் தினகரனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவாரூரில் அரிசி ஆலைக்குத் தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் என்று வெளியான பல செய்திகள் நமக்கு கிடைத்தன.
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தன்ராஜின் சென்னை ஊரப்பாக்கம் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று DTநெக்ஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. விகடன், தினமலர், இந்து தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிலும் இந்த பணம் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் எடுக்கப்பட்டது என்றே குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: dtnext.in I Archive 1 I vikatan.com I Archive 2 I hindutamil.in I Archive 3
இதன் மூலம், இந்த புகைப்படத்துக்கும் கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் பணத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது. பழைய படத்தை எடுத்துவந்து பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் 2020 டிசம்பரில் கைப்பற்றப்பட்ட பணத்தின் படத்தை, பால் தினகரன் வீட்டில் எடுத்த பணம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் பழைய படம்!
Fact Check By: Chendur PandianResult: False