
‘’அழகர் போல வேஷமிட்டுள்ள ஏசு. இவர்தான் அழகேசு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்து தேசபக்தன் என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை, ஜூலை 28, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் போல வேறு யாரேனும் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்ந்துள்ளார்களா என தேடிப் பார்த்தோம். அப்போது நிறைய பேர் இதுபோல பதிவு வெளியிட்டிருப்பதை காண நேரிட்டது.

ஆனால், இவர்கள் குறிப்பிடுவது போல இது இயேசுவின் சிலை அல்ல. இது ராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் உள்ள சிலையாகும். சந்தியாகப்பரை கிறிஸ்தவர் மட்டுமின்றி இந்துக்கள், முஸ்லீம்கள் பலரும் வழிபாடு செய்கிறார்கள். யாகப்பர் அப்பகுதி கிறிஸ்தவர்களால் வணங்கப்படும் காவல் தெய்வமாகும். அங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்னை மரியாளின் தீவிர பக்தராக அறியப்படுவதால், அங்குள்ள தேவாலயத்தில் மரியாள் மற்றும் யாகப்பருக்கு சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த சிலைகளை அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கமாகும்.
இதற்காக அலங்கரிக்கப்பட்ட சிலையைத்தான் யாரோ புகைப்படம் எடுத்து வெளியிட, இந்த சிலை பார்ப்பதற்கு இயேசு போலவே இருப்பதால், பலரும் அதனை உண்மை என நினைத்து ஷேர் செய்து வருகிறார்கள்.
இதுபற்றி கடந்த ஆண்டு விகடன் இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

யாகப்பர் பற்றிய வரலாறு தேடியபோது, இதேபோன்ற ஒரு யாகப்பர் ஆலயம் யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள விவரம் தெரியவந்தது. ராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடைப்பட்ட தீவுப்பகுதிகளில் வசித்த மீனவ மக்கள், யாகப்பரை தங்களது காவல் தெய்வமாக வணங்கியுள்ளனர்.
யாகப்பர் பெயரில் இயங்கி வரும் ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதுதவிர, புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 476ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சிறப்பு தபால் உறை வெளியிட்டுள்ளது. அதற்கான ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படத்தில் இருப்பது இயேசு கிறிஸ்து அல்ல. அவர் புனித சந்தியாகப்பர். மீனவ மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படுபவர் என சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான புகைப்படம், வீடியோ மற்றும் செய்தியை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அழகர் போல வேஷமிட்ட ஏசு: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False

இந்த புனித சந்தியாகப்பர் ஒரு கடவுள், சரி, எந்த மத கடவுள், இல்ல மதங்களை ஒதுக்கிய கடவுளா, அப்படினா அது கடவுளே அல்ல