
கர்நாடகாவில் அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நடத்துனர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “பெங்களூரு அரசு பேருந்தில் கண்டக்டராக இருந்த மது என்பவர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிக்கான யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தேர்ச்சி. கண்டக்டராக இருந்தவர் கலெக்டராகும் தேர்வில் வெற்றி.. சாதாரண மக்களின் பலமிக்க ஆயுதம் கல்வி. அதை சரியாக பயன்படுத்தினால் சாதிக்கலாம். பாராட்டுக்கள் மது!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Siva Kumar என்பவர் மே 9ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக பஸ் கண்டக்டராக பணியாற்றி வரும் மது என்பவர் தான் ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வில் வெற்றிபெற்றுவிட்டதாகவும், நேர்முகத் தேர்வுக்காக காத்திருப்பதாகவும் கூறியதாக செய்திகள் வைரலாகியது. கடைசியில் அது தவறான தகவல் என்றும், நடத்துநர் மது தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் முதலில் இந்த செய்தியை வெளியிட்ட பெங்களூர் மிரர் என்ற ஊடகம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த தகவல் தெரியாமல் நடத்துநர் மது பற்றிய பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவது அதிர்ச்சியை அளித்தது. எனவே, நடத்துநர் மது சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
முதலில் இந்த செய்தியை முதலில் வெளியிட்ட பெங்களூர் மிரர் இணைய பக்கத்தில் இந்த செய்தி உள்ளதா என்று தேடினோம். ஆனால், அந்த பக்கத்தில் இருந்து செய்தி அகற்றப்பட்டு இருந்தது. ஆனால், கர்நாடக பஸ் நடத்துநர், ஐ.ஏ.எஸ் தேர்வு உள்ளிட்ட வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடியபோது, நடத்துநர் மது ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றார் என்று முதலில் வெளியான செய்தியை பல இணையதளங்கள் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
செய்தித்தாளில் வெளியான செய்தியையும் சிலர் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

நம்முடைய தேடலில், பெங்களூர் மிரர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலும் நமக்கு கிடைத்தது. அதில், “ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றதாக பி.எம்.டி.சி நடத்துநர் கூறியது பொய்யானது என்று எங்களுக்குத் தெரியவந்துள்ளது. அவர் அளித்த தேர்வு பதிவு எண் அவருடையது இல்லை என்று தெரியவந்துள்ளது. எங்களிடமும் பி.எம்.டி.சி போக்குவரத்துக் கழகத்திடமும் அவர் கூறியது பொய் என்று தெரியவந்ததால் அந்த செய்தியை நீக்குகிறோம். எங்களுடைய வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்” என்று கூறியிருந்தது.
இதே பதிவை பெங்களூர் மிரர் பத்திரிகையின் ஆசிரியர் ரவி ஜோஷியும் வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் மற்ற ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.
இதன் அடிப்படையில், பெங்களூரு அரசு பஸ் கண்டக்டராக இருந்த மது ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.

Title:சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் கர்நாடக பஸ் கண்டக்டர் வெற்றி என பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
