
உத்தரப்பிரதேச தொழிலாளர்களுக்காக பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பஸ்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது ரயில் அல்ல! புலம்பெயர்ந்த உ.பி தொழிலாளிகளுக்காக இளம் இந்திரா பிரியங்கா காந்தி அவர்கள் அனுப்பிய பேருந்துகள்! ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உ.பி-யைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல மாநிலங்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாத நிலையில் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் அவதியுற்று வரும் நிலையில், அவர்களை சொந்த ஊரில் விடுவதற்காக 1000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்தார். அந்த பஸ்களுக்கு உ.பி-யில் அனுமதி வழங்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டார்.
உ.பி தொழிலாளர்களுக்காக பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பஸ்கள் என்று குறிப்பிட்டுள்ளதால், அந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடியபோது. 2019ம் ஆண்டு நடந்த கும்பமேளாவையொட்டி இயக்கப்பட்ட பஸ்கள் என்று பல ஊடகங்கள் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி மற்றும் புகைப்படம் என்று 2019 பிப்ரவரி 28ம் தேதி வெளியான என்டிடிவி செய்தியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது. அதில், உத்தரப்பிரதேச மாநில அரசு புதிய கின்னஸ் உலக சாதனையை படைக்க கும்பமேளாவையொட்டி 500 பஸ்களை வரிசையில் நிறுத்தியுள்ளது. இதற்காக மாநில போக்குவரத்துத் துறை 18 மண்டலங்களில் இருந்து பஸ் மற்றும் பணியாளர்களை பிப்ரவரி 27ம் தேதியே அனுப்பி வைக்க உத்தரவிட்டிருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.
டைம்ஸ் நவ் நியூஸ் 2019 மார்ச் 1ம் தேதி வெளியிட்டிருந்த செய்தியில், உ.பி அரசின் பஸ்களை நிறுத்திவைக்கும் சாதனையை கின்னஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.

நம்முடைய ஆய்வில், இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஏ.என்.ஐ வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய படத்தை எடுத்து, உ.பி தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பஸ் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
இதே போன்று நிறைய புகைப்படங்களை பகிர்ந்து, பலரும் பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பஸ் இது என்று தகவல் பரப்ப தொடங்கியுள்ளனர். உதாரணமாக, கீழே ஒரு ஃபேஸ்புக் பதிவை இணைத்துள்ளோம். இதில் இருக்கும் புகைப்படமும் 2019ம் ஆண்டில் எடுத்ததுதான். அதன் முழு விவரம் பற்றிய லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.

Title:புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False

போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது