
இதுதான் கடலில் இருக்கும் அபூர்வ விநாயகர் சிலை. இதை உடனே பகிர்ந்தால் நல்லது நடக்கும் என்று கூறி ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த தகவலின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
கோவில் அர்ச்சகர் ஒருவர், கோட்டைச் சுவர் போன்று இருக்கும் இடத்தில் தண்ணீரில் பாதி மூழ்கி இருக்கும் விநாயகர் சிலையைத் தொடுவது போல இந்த படம் உள்ளது. அதில், இது கடலில் இருக்கும் அபூர்வ விநாயகர் சிலை… உடனே பகிர்ந்தால் நல்லது நடக்கும். பகிராமல் போனால் பிரச்னை வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். உன் அடிமை நான் என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவைக் கடந்த ஜனவரி 18ம் தேதி வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில், கடலில் இருக்கும் அபூர்வ விநாயகரை உடனே ஷேர் செய்யுங்கள் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து நல்ல செய்தி உடனே கிட்டிடும். படித்துவிட்டுப் பகிராமல் போனால் பிரச்னைகள் வந்து சேரும் என்று குறிப்பிட்டுள்ளனர். பகிர்ந்தால் நல்லது நடக்கும் என்பது எல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயம். அதற்குள் நாம் செல்ல விரும்பவில்லை.
கடலுக்குள் இருக்கும் அபூர்வ விநாயகர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எங்கே உள்ளது, அந்த இடத்துக்கு என்ன பெயர் என்று எதுவும் குறிப்பிடவில்லை. இதனால், இந்த பகுதியை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் பற்றிய தகவல் கிடைத்தது.


இந்த விநாயகர் இருப்பது மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பீமா சங்கர் கோவிலில் என்பது தெரிந்தது.
nearmumbai.com இணையதளத்தில் பீமா சங்கர் ஆலயம் பற்றி பல தகவல் அளிக்கப்பட்டு இருந்தது. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பயன்படுத்தப்பட்ட அர்ச்சகர் விநாயகர் சிலையை தொடும் படமும் கிடைத்தது. மஹாராஷ்டிரா.காம் வாட்டர் மார்க்குடன் இந்த படம் இருந்தது. மேலும் அந்த படத்தில் பீமா சங்கர் என்று இந்தியில் எழுதப்பட்டு இருந்தது.

இந்த கோவில் கடலுக்குள் அல்லது கடற்கரையில் அமைந்துள்ளதா என்று பார்த்தோம். இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 1034 மீட்டர் அதாவது சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது என்று தெரிந்தது. இது பற்றி மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள். அனைத்துக்கும் மேலாக, புனே மாவட்டத்திற்கு கடல் எல்லையே இல்லை.

ஃமேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளதுபோன்ற இடம் பீமா சங்கர் ஆலயத்தில் உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்போது, டிரிப் அட்வைசர் இணையத்தில் வெளியான படம் நமக்கு, அது உண்மைதான் என்பதை நிரூபித்தது.

நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், மலைக்கு மேல் உள்ள விநாயகர் சிலையை லைக் மற்றும் ஷேர் கிடைக்க வேண்டும் என்பதற்காக கடலில் இருக்கும் அபூர்வ விநாயகர் என்று தவறான குறிப்பிட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. பீமா சங்கர் ஆலயம் என்பது மிகவும் புகழ் பெற்ற ஆலயம். 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று. அதை சொல்லியிருந்தாலே ஷேர் மற்றும் லைக்ஸ் அள்ளியிருக்கலாம். இதை மறைத்துவிட்டு, கடலில் உள்ள விநாயகர் என்று கூறி பதிவை பகிர்ந்துள்ளனர்.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:கடலில் இருக்கும் அபூர்வ விநாயகர்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
