
பரிசுத்த வேதாகமத்தில் இருந்து வேத வசனங்களை வாசித்து வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் முன்னிலையில் ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் விழாவில் நடந்த சர்வமத பிரார்த்தனையில் கிறிஸ்தவ பிரார்த்தனை காட்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “பரிசுத்த வேதாகமத்தில் இருந்து வேத வசனங்களை வாசித்து வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமர் முன்னிலையில் ரஃபேல் விமானங்களை விமானப்படையில் பிரதிஷ்டை செய்த ஜெப காணொலி. இந்தியா கிறிஸ்துவை கண்டு கொள்ளும் காலம் விரைவில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Thangaraj Raj என்பவர் 2020 செப்டம்பர் 10ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ரஃபேல் போர் விமானத்தை இந்திய விமானப் படையில் இணைக்கும் விழாவில் கிறிஸ்தவ வழிபாடு மட்டுமே பின்பற்றப்பட்டது போன்ற தோற்றத்தை பதிவு ஏற்படுத்துகிறது. அதனுடன், இந்த விழாவில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் இது தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். எல்லா முன்னணி நாளிதழ்கள், தொலைக்காட்சி ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகி இருந்தது. அவற்றில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா ரஃபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளது. முதல் கட்டமாக ஐந்து விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றை முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கும் விழா 2020 செப்டம்பர் 10ம் தேதி ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடந்தது.
இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லே, முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இதில் சர்வமத பிரார்த்தனை நடந்தது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
விழாவில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்றது தொடர்பாக எந்த ஒரு செய்தியோ, வீடியோவோ, புகைப்படமோ கிடைக்கவில்லை. இதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜெய்சங்கர் பங்கேற்றதாக கூறப்படும் தகவல் தவறானது என்பது உறுதியானது.
இந்த விழாவின் வீடியோவைப் பார்த்த போது இஸ்லாம், சீக்கிய மதம் மற்றும் கிறிஸ்தவ மத பிரார்த்தனை நடந்தது. அம்பாலாவில் இந்து மத வழிபாடு நடந்ததது பற்றிய குறிப்பு இல்லை. பிரான்ஸ் நாட்டிலேயே இந்து மத வழிபாடு அடிப்படையில் நிகழ்ச்சி நடந்ததால் இங்கு குறிப்பிட்ட விழா நேரத்தில் நடத்தவில்லையோ என்னவோ… இதன் மூலம் சர்வ மத பிரார்த்தனை நடந்த பிறகு விமானம் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.

இதன் மூலம் முழு வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடுத்து, பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் பரிசுத்த வேதாகமத்தில் இருந்து வேத வசனங்கள் வாசித்து ரஃபேல் போர் விமானம் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று உண்மையுடன் தகவறான தகவலும் சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் உண்மையும் தவறான தகவலும் கலந்த பதிவாக உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பிரதமர் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி ரஃபேல் போர் விமானம் இணைக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
