
திராவிடம் மண்டியிட்டது என்ற தலைப்பில், சாமி சிலை ஒன்றுக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி வழிபடுவது போன்ற படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தகவலின் விவரம்
திராவிடம் மண்டியிட்டது …….
த்தா இனிமே எவனாது பெரியார் பொரியார்ன்னு வந்தா 10, செருப்படி விழும் சொல்லி வை
இந்த புகைப்படத்தில் சாமி சிலை ஒன்றுக்கு சிவப்பு நிற ஆடை அணிந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி வணக்கம் தெரிவிப்பது போன்று உள்ளது. இந்த பதிவை கிழியும் நாத்திக டவுசர் என்ற குழு பதிவிட்டுள்ளது. திராவிடம் மண்டியிட்டது என்று கூறப்பட்டிருப்பதாலும் தி.மு.க, திராவிட எதிர்ப்பு மன நிலை உள்ளவர்களாலும் இந்த பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை அறிவோம்:
படத்தை நன்கு பார்த்தால், அதில் நடிகர் வடிவேலு, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் இருப்பது தெரிந்தது. இதன்மூலம் இது மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. இருப்பினும், அசல் படத்தைக் கண்டறிய முடிவு செய்தோம்.

மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அது தொடர்பாக செய்தி, படம் ஏதேனும் உள்ளதா என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பார்த்தோம். அதில், மே தின வாழ்த்து செய்தி மற்றும் படங்கள் இருந்தன.
உலகெங்கிலும் வாழ்கின்ற உழைக்கும் தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) May 1, 2019
ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எப்போதும் தொழிலாளர்களின் தோளோடு தோள் நிற்கும் தி.மு.கழகத்தின் சார்பில், தொழிலாளர்களின் வாழ்வில் மகிழ்ச்சி தவழ்ந்திட வாழ்த்துகிறேன்!#MayDay pic.twitter.com/rppWuqIBXo
அதில், மே தின நினைவுச் சின்னத்துக்கு ஸ்டாலின், கனி மொழி உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தும் படம் இருந்தது. அதை எடுத்து, மார்ஃபிங் செய்திருப்பது தெரிந்தது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்திலும், ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து எடுத்த படத்திலும் ஒரே மாதிரியான காட்சிகள் இருப்பதை காணலாம். கனிமொழியின் பின்னால் நிற்பவர், அருகில் தி.மு.க கொடி. ஸ்பீக்கர் என எல்லாம் எடிட் செய்யப்பட்ட படத்திலும் இருக்கிறது. ஆதார படம் கீழே…

இந்த படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று கூகுளில் தேடினோம். அப்போது, மே 1 அன்று, தூத்துக்குடியில் தி.மு.க சார்பில் பேரணி நடத்தப்பட்டு மே தின நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட செய்தி கிடைத்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டது என்பது உறுதியானது.
நகைச்சுவைக்காக இந்த பதிவு வெளியானது போலவும் இல்லை. மண்டியிட்ட திராவிடம் என்று தொடங்கி செருப்படி வரை வெறுப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த பதிவு இருந்தது. இதனால், காமெடிக்காக இந்த போட்டோ பகிரப்பட்டுள்ளது என்று கருத முடியாது.
மேலும், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுக்கு பலரும் கமெண்ட் செய்துள்ளனர். பலரும் இது மோசமான போட்டோஷாப் வேலை, தவறானது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் பதிவு அகற்றப்படவில்லை. இதன் மூலம் ஸ்டாலின், தி.மு.க மீது வேண்டுமென்றே வெறுப்பை உமிழும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது தெளிவாகிறது.

பதிவை வெளியிட்ட கிழியும் நாத்திக டவுசர் ஃபேஸ்புக் பக்கத்தின் பின்னணியை ஆய்வு செய்தோம். பெரியார் சிலைக்கு விபூதி பூசப்பட்டிருந்த படம், இந்த பக்கத்தின் ப்ரொஃபைல் படமாக இருந்தது.

திராவிட இயக்கம் பற்றியும் பிற மதங்கள் பற்றியும் பல வெறுப்பை ஏற்படுத்தும் பதிவுகள் இருந்தன. பதிவின் தொடக்கமே கெட்ட வார்த்தையுடன் இருந்தது. பல பதிவுகள் சுட்டிக்காட்ட கூட முடியாத அளவுக்கு வக்கிரமாக இருந்தது. இதனால், இந்த பக்கத்தின் சார்பு தன்மை என்ன என்பது புரிந்தது.
நாம் மேற்கொண்ட ஆய்வில், இந்த படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. மேலும், திராவிட இயக்கங்கள் மற்றும் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக விஷமத்தனமாக இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஸ்டாலின் சாமி கும்பிட்டது போன்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:சாமி சிலைக்கு மலர் தூவி வழிபட்டாரா மு.க.ஸ்டாலின்?– வைரல் புகைப்படம்
Fact Check By: Praveen KumarResult: False
