
‘’தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்ய தீர்மானித்தோம். முடிவுகள் இதோ…
தகவலின் விவரம்:
…தண்ணியில வெண்ணை எடுக்கிறவர கண்டிருக்கிங்களா? அவர்தான்மோடி..! இனியும் அனுமதிக்கலாம் அவரின் ஆட்சியை..?…
ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ தண்ணியில வெண்ணை எடுக்கிறவர கண்டிருக்கிங்களா? அவர்தான்மோடி..! இனியும் அனுமதிக்கலாம் அவரின் ஆட்சியை..?,’’ எனக் கேட்டுள்ளனர். கீழே, மோடியின் புகைப்படம், தி இந்துவில் வெளியான செய்தி ஆதாரம் மற்றும் வடிவேலுவின் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து ஒரு மீமை பகிர்ந்துள்ளனர். அதில், ஏன்டா, நாங்க டிரெய்ன்ல போறதும் உனக்கு பிடிக்கலையாடா, இப்டி கொஞ்சம் கொஞ்சமா எங்கள கொல்றதுக்குப் பதிலா ஒரேயடியா எங்கள குழி தோண்டி பொதச்சுடுரா, என்று எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தமிழ் இந்துவில் வெளியான செய்தியும், பதிவை வெளியிட்டவரின் சொந்த கருத்தும் என இரண்டும் கலந்துள்ளது. முதலில், தமிழ் இந்துவில் இப்படி ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா, என தேடிப் பார்த்தோம்.

எடுத்த எடுப்பிலேயே, தமிழ் இந்துவில் வெளியான செய்தி ஆதாரம் கிடைத்தது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி இத்தகைய செய்தியை தமிழ் இந்து இணையதளம் பகிர்ந்துள்ளது. அதில், செய்தியின் தலைப்பு, நாம் ஆய்வு செய்யும் மீமில் உள்ளவாறுதான் இருந்தது. இதுதவிர, ரயில்களிலும், ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள், குளிர்பானங்கள், டீ, காபி உள்ளிட்டவற்றுக்கு, 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, தமிழ் இந்து இவ்வாறு செய்தி வெளியிட்டது உண்மைதான் என சந்தேகமின்றி தெளிவாகிறது. அதேசமயம், நாம் ஆய்வு செய்யும் பதிவில் உள்ள மற்ற விசயங்கள், அதாவது, மோடியின் புகைப்படம், வடிவேலுவின் புகைப்படம், அதில் எழுதியுள்ள அரசியல் கருத்துகள் உள்ளிட்டவை, இதனை பதிவு செய்தவரின் தனிப்பட்ட கருத்துகளாகும். அத்துடன், குறிப்பிட்ட பதிவில் உள்ள மீமில் beliketamizha என்றும், ASKAR SHA MEMES என்றும் எழுதப்பட்டுள்ளது. எனவே, இந்த மீமை தயாரித்து முதலில் வெளியிட்டவர்கள் வேறு நபர்கள் என்றும், அதனை மீண்டும் நாம் ஆய்வு செய்யும் பதிவில் பகிர்ந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

ஊடகத்தில் வெளியான உண்மைச் செய்தியை எடுத்து, அவரவர் சொந்த கருத்துகளை அதில் கலந்து, மீம் வெளியிட்டுள்ளனர். எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் கூறப்பட்டுள்ளதில், பாதி உண்மை; பாதி சொந்த கருத்து என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை; பாதி சொந்த கருத்து உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, தகவல், செய்தி மற்றும் புகைப்படங்களை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிரும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபர் யாரேனும் உங்கள் மீது புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!
Fact Check By: Parthiban SResult: Mixture
