
‘’இஸ்ரோவில் இட ஒதுக்கீடு கிடையாது, அனைவரின் திறமையின் அடிப்படையில் வேலைக்கு வந்ததால் இஸ்ரோ உலகிலேயே முதலிடத்தில் உள்ளது,’’ என்று கூறும் ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மாவு பாக்கெட் 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 23, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’திறமையின் அடிப்படையில் பணி கொடுத்ததால் இஸ்ரோ உலக அரங்கில் முதலிடத்தில் உள்ளது, இட ஒதுக்கீடு உள்ளே போயிருந்தால் நாசமா போயிருக்கும், அரசு அலுவலகங்களைப் போல,‘’ என்று எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பார்க்கும்போது, இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வருபவர்கள் அனைவருமே திறமைசாலிகள் கிடையாது என்றும், இஸ்ரோவில் இட ஒதுக்கீடே இல்லை என்றும் நினைக்க தோன்றுகிறது. ஆனால், உண்மை அப்படியல்ல.
இதுபற்றி சந்தேகத்தின் பேரில், நேரடியாக முதலில் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆதாரம் தேடினோம். அங்கு வேலைவாய்ப்பு பிரிவில் சமீபத்தில் இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு ஒன்றை எடுத்து ஆய்வு செய்தோம்.

இதன்படி, Recruitment of Scientist/Engineer ‘SC’ in the disciplines of Civil, Electrical, Ref & Air-Conditioning and Architecture என்ற பணிக்கு விண்ணப்பம் செய்வது எப்படி, அதற்கு என்னென்ன தகுதி, வழிமுறைகள் என்று தேடினோம். அப்போது, முறையான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அந்த பணியிடத்திற்கு சமீபத்தில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதற்கான அறிவிப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மட்டும் ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.

இதேபோல, மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடந்த நிலையில், தற்போது அதற்கான ஆள் சேர்க்கை நடைபெறுவதாகவும், அதற்கு ஒவ்வொரு ஜாதியினருக்கும் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை என்பதையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும். அதே ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது மத்திய அரசுக்குச் சொந்தமான இஸ்ரோவிலும் முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்றியே ஆள் தேர்வு நடைபெறுகிறது என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது. இதுதவிர, மயில்சாமி அண்ணாதுரை மற்றும் சிவன் போன்ற பல திறமைசாலிகள் இட ஒதுக்கீடு முறையில் படித்துத்தான் இஸ்ரோவில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்துள்ளனர்.
திறமை இருந்தாலும், இட ஒதுக்கீடு இல்லை என்றால் இன்றைக்கு சிவன் இஸ்ரோவின் தலைவர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்திருக்க முடியாது. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த சிவனின் வாழ்க்கை வரலாறே இதற்கு சரியான சாட்சியாகும்.

இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வருவோர் அனைவருமே திறமையற்றவர்கள் என்று பொத்தாம் பொதுவாகக் குறை சொல்வது தவறு. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவலை உண்மை என நம்பி பகிர்வது தவறாகும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இஸ்ரோவில் இட ஒதுக்கீடு கிடையாது: விஷமத்தனமான ஃபேஸ்புக் செய்தி
Fact Check By: Pankaj IyerResult: False
