
‘’கல்லூரி மாணவர்களின் கையை உடைத்த சென்னை போலீஸ்,’’ என்ற தலைப்பில் பரவி வரும் ஒரு புகைப்படம் பற்றி நமக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த பதிவில் டீன் ஏஜ் சிறுவர்கள் கை உடைந்த நிலையில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ சென்னை கல்லூரி மாணவர்கள் எல்லாரும் ஒட்டுக்கா சேந்து போயி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டானுகலாம்!வேலையில்லா பட்டதாரி படத்தில தனுஷ் சொல்ற டயலாக்க அப்டியே யூஸ் பன்னிருக்கானுக.. அவன் தப்பே செஞ்சிருந்தாலும் அத வழக்கு பதிவு செஞ்சு விசாரணை செய்ய மட்டும் தான் உனக்கு அதிகாரம் இருக்கு.. இது நீ செஞ்சிட்ருக்க Custodial violence. ஏன்டா ஊருக்குள்ள ஆணவக்கொலை பன்றானுக, சைக்கோ கொலைகள் நடக்குது, ஜெய் ஸ்ரீ ராம் னு சொல்ல சொல்லி கொலை செய்றானுக .. இதையெல்லாம் விட்டுட்டு petty case ல புடிச்சவன கை கால ஒடச்சிருக்கிங்க.. இதெல்லாம் நீங்க நெனச்சு பாத்தா உங்களுக்கே கேவலமா இருக்காத ஆபீஸர் ?,’’ என எழுதப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர்கள் வேறு ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் என்றும், இவர்களுக்கும், இந்த செய்திக்கும் தொடர்பில்லை என்றும் இந்த ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட் பிரிவில் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்பேரில், சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த கல்லூரி மாணவர்கள் இடையேயான அரிவாள் சண்டை பற்றிய செய்தியை தேடினோம். அப்போது, நியூஸ் ஜே, பிபிசி தமிழ் இதுபற்றி வெளியிட்ட செய்தியின் விவரம் கிடைத்தது. அதில், பேருந்தில் அரிவாள் வைத்து சக மாணவர்களை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், சுருதி, மதன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த 2 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தும் உள்ளது.
இதுபற்றி நியூஸ் ஜே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதேபோல, பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் மற்றொரு வழக்கில் கைதான நபர்களின் புகைப்படமாகும். பேருந்தை வழிமறித்து அரிவாள் சண்டையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட பச்சையப்பன் மாணவர்களின் புகைப்படம் வேறு ஒன்று என தெளிவாகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம் தவறான ஒன்று எனவும், இது ஃபேஸ்புக் பயனாளர்களை குழப்புவதாக உள்ளது எனவும் உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான புகைப்படம், வீடியோ மற்றும் செய்திகளை உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கல்லூரி மாணவர்களின் கையை உடைத்த போலீஸ்: தவறான புகைப்படத்தால் குழப்பம்
Fact Check By: Pankaj IyerResult: False
