
‘’1000 ஆண்டு பழமையான முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link
Hindu Samayam என்ற ஃபேஸ்புக் ஐடி, மே 4, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதன் மேலே, ‘’ பிரான் மலையில் உள்ள 1000-ஆண்டு பழமையான முருகன் மற்றும் சிவன் கோயிலை இடித்து தள்ளி விட்டு மசூதி கட்டிய அவலத்தை பாருங்கள்,’’ என்று எழுதி, கீழே அவர்களின் இணையதள செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளார்.
இந்த லிங்கை கிளிக் செய்தால், அது hindusamayamtv இணையதளத்திற்கு சென்றது. அங்கே 1000-ஆண்டு பழைய முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி! என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். இந்த செய்தியை நமது ஆதாரத்திற்காக, ஆர்கிவ் செய்துள்ளோம். அந்த இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
Archived Link
அதே செய்தியை புகைப்பட வடிவில் சேகரித்து கீழே பகிர்ந்துள்ளோம்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ள விசயமே முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. அதாவது, பிரான்மலையில் பிள்ளையார் கோயில், முருகன் கோயில் உள்ளதாகவும், இவை இரண்டுக்கும் நடுவே பள்ளத்தில் தர்ஹா ஒன்று உள்ளதாகவும் கூறியுள்ளனர். செய்தி ஆரம்பிக்கும்போது, முருகன் கோயிலை இடித்துவிட்டு கட்டிய தர்ஹா எனக் கூறும் இவர்கள், செய்தியின் நடுவே, முருகன் கோயிலுக்கும், விநாயகர் கோயிலுக்கும் இடையே தர்ஹா உள்ளதென்று கூறுவதன் மூலமாக, வாசகர்களை குழப்புவது உறுதியாகிறது.

இதேபோல, ஒரு கோயிலின் சுவற்றில் அல்லா என எழுதியிருப்பதாகவும், கூறியுள்ளனர். இது யாராவது விஷமிகள் செய்திருக்கலாம். அதற்காக, இந்து கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் மசூதி கட்டினார்கள் என்பது ஏற்புடையதல்ல. சுவற்றில்தான் அல்லா என எழுதியுள்ளார்களே தவிர, அந்த கோயிலையே இடித்துவிடவில்லை.

மேலே பார்க்கும் கோயிலுக்கு புத்தம் புதியதாக வெள்ளையடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மலை உச்சியில் இருப்பதால் போதிய பராமரிப்பின்றி இந்து கோயில்கள் இப்படி ஆகியிருக்கலாம். அதற்காக, கோயிலை இடித்துவிட்டு, தர்ஹா கட்டினார்கள் என்பது தவறான தகவல். இவர்கள் சொல்லும் முருகன் கோயில், விநாயகர் கோயில் மற்றும் தர்ஹா என அனைத்துமே ஒரே மலையில் வெவ்வேறு பகுதிகளில் உள்ளன.
இவர்கள் சொல்வது போல குறிப்பிட்ட தர்ஹா இப்போது திடீரென கட்டப்படவில்லை. இது பல ஆண்டுகளாக, பிரான்மலையில் இருப்பதாக தெரிகிறது. அதற்கான வீடியோ ஆதாரம் கீழே உள்ளது. இந்த வீடியோவில் முருகன் கோயிலும், தர்ஹாவும் அருகருகே இருப்பதை நீங்கள் காண முடியும். முருகன் கோயிலுக்கு அடையாளமாக வேல்கள் நடப்பட்டு, ஓம் என எழுதப்பட்டிருக்கும். அதன் அருகேதான் இந்த தர்ஹா கட்டப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட தர்ஹா சிவகங்கை மாவட்ட ஆன்மிக சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இதனை சிவகங்கை மாவட்ட நிர்வாக இணையதளத்திலேயே காணலாம். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர, கூடுதல் ஆதாரங்களுக்காக, ஃபேஸ்புக்கில் பிரான்மலை பற்றி யாரேனும் உள்ளூர்வாசிகள் பதிவிட்டுள்ளார்களா என தேடிப் பார்த்தோம். அப்போது, இந்த செய்தியை பலரும் பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது. அதில், ஒரு பதிவின் கீழ், சம்பந்தப்பட்ட பிரான்மலை பகுதி மக்கள் சிலரே மறுப்பு தெரிவித்து கமெண்ட் பகிர்ந்துள்ளதை காண முடிகிறது. அவற்றில் சிலவற்றை இங்கே இணைத்துள்ளோம்.

அதாவது, பிரான்மலை அடிவாரத்தில் திருக்கொடுங்குன்ற நாதர் (முத்து வடுக பைரவர்) கோயில் ஒன்றும், மேலே முருகன் மற்றும் விநாயகர் கோயில், மறுபகுதியில் தர்ஹா ஆகியவை உள்ளதாகவும் தெரியவருகிறது. இதில், அடிவாரத்தில் உள்ள கோயிலை மட்டும் இந்து சமூகத்தினர் பராமரிப்பதாகவும், மேலே உள்ள கோயில்களை சரிவர பராமரிப்பதில்லை எனவும் உள்ளூர் மக்களே புகார் தெரிவித்துள்ளனர். அத்துடன், தர்ஹாவும், முருகன் கோயிலும் அருகருகே இருந்தாலும் எந்த சண்டையும் இன்றி இரு சமூகத்தினரும் பண்டிகைகளை கொண்டாடுவதாக, உள்ளூர் மக்களே கமெண்ட் பகிர்ந்துள்ளனர்.

எனவே, hindusamayamtv இணையதளம் வெளியிட்ட செய்தியில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பிரான்மலையில் முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதா?
Fact Check By: Parthiban SResult: False
