
மேட்டுப்பாளையம் சுவர் குறித்து 1998ம் ஆண்டு கருணாநிதியிடம் புகார் கொடுத்தோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Article Link |
புதிய தலைமுறை வெளியிட்ட ட்வீட் பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டது போல பதிவு உள்ளது. அதில், “மேட்டுப்பாளையம் சுவர் குறித்து 1998ம் ஆண்டே கருணாநிதியிடம் புகார் கொடுத்தோம். அதை கிடப்பில் போட்டதால் இன்று 17 பேர் சாவு. தி.மு.க-தான் காரணம்” என்று முத்தரசன் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Raghava Lawrence ☑ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Rajukannan Subburaj என்பவர் டிசம்பர் 4ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ட்விட்டர் பதிவில் ஃபாண்ட் அளவை பெரிதாக்க முடியாது. ஆனால், இதில் பெரிதும் சிறிதுமாக மாற்றி மாற்றி வார்த்தைகள் இருந்தன. இதனால், இது எடிட் செய்யப்பட்டது என்று தெரிகிறது. புதிய தலைமுறை வெளியிட்ட அசல் ட்வீட்டை தேடி எடுத்தோம். அதில், கருணாநிதியிடம் அளித்தோம் என்று முத்தரசன் கூறவில்லை.
Archived Link |
ஒருவேளை, முத்தரசன் அறிக்கையில் கருணாநிதியிடம் அளித்தோம் என்று கூறினாரா என்று பார்த்தோம்.
அந்த செய்தியில், “17 பேர் மரணத்திற்கு காரணமான சுற்றச்சுவர் குறித்து கடந்த 1998ம் ஆண்டே கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்” என்று இருந்தது.

கலெக்டரிடம்தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியிடம் இல்லை. இது குறித்து புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர்கள் இது போலியானது என்றனர்.
1998ம் ஆண்டு தி.மு.க-தான் ஆட்சியிலிருந்தது. அதன்பிறகு அ.தி.மு.க தான் அதிக காலம் ஆட்சியில் இருந்துள்ளது. இத்தனை ஆண்டுகள்தான் நடவடிக்கை எடுக்கவில்லை, கடந்த ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையிலாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம். இதில் எந்த கட்சி செய்தது சரி, தவறு என்று நாம் ஆய்வு செய்யவில்லை. 1998ம் ஆண்டு மேட்டுப்பாளையம் சுற்றுச் சுவர் குறித்து புகார் அளித்ததாக முத்தரசன் கூறியது உண்மை. ஆனால், கருணாநிதியிடம் அளிக்கவில்லை, கோயமுத்தூர் ஆட்சியரிடம் அளித்ததாக மட்டுமே அவர் அளித்துள்ளார்.

புதியதலைமுறை வெளியிட்ட ட்வீட்டை ஸ்கிரீன்ஷாட் செய்து, தவறாக எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் பகிரப்படும் நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று புதிய தலைமுறை நமக்கு தெரிவித்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையோடு பொய்யும் சேர்த்து போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மேட்டுப்பாளையம் சுவர் விவகாரம்: முத்தரசன் பற்றி புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி என்ன?
Fact Check By: Chendur PandianResult: Partly False
