
இங்கிலாந்து அரசிக்கு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மரியாதை அளித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் வரும்போது, அவருக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தது போன்ற படம் ஒன்ற பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “இவர்களா தேச பக்தர்கள்? – விடுதலைப் போராட்ட போராளிகளை காட்டிக்கொடுத்து ஆங்கிலேயர்களுக்கு அணிவகுத்து மரியாதை செய்யும் ஆர்.எஸ்.எஸ்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
நிலைத் தகவலில், “விடுதலைப் போரில் போராளிகளை காட்டிக்கொடுத்து ஆங்கிலேய *** அணிவகுத்து மரியாதை செய்யும் தேசவிரோத RSS பயங்கரவாதிகள். இவர்களா தேச பக்தர்கள்?” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Murugan Thirupathi Asari என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 24 நவம்பர் 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இங்கிலாந்து அரசியாக இரண்டாம் எலிசபெத் பதவி ஏற்றது 1952ம் ஆண்டு. அதாவது இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான் அவர் இங்கிலாந்து அரசியானார். அப்படி இருக்கும் போது சுதந்திரத்துக்கு முன்பு அவருக்கு எப்படி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மரியாதை அளித்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இரண்டாம் எலிசபெத் எப்போது எல்லாம் இந்தியா வந்துள்ளார் என்று பார்த்தோம். அவர், 1961ம் ஆண்டுதான் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் பகிரப்படும் படமும் அசல் போல இல்லை. இரண்டு படங்களை சேர்த்து பதிவிட்டதுபோல, பழைய புகைப்படம் போலத் தெரிய போட்டோஷாப் வேலை செய்தது போல உள்ளது. அதை உறுதி செய்ய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2008ம் ஆண்டு ஒரு பிளாக்கில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுத்து நிற்கும் புகைப்படம் நமக்கு கிடைத்தது. அதில், எலிசபெத் ராணி இல்லை. இந்த படம் பல ஆண்டுகளாக பல ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதும் தெரிந்தது.

Search Link | mavaljagran.blogspot.com | Archived Link |
நம்முடைய தேடலில், இந்த புகைப்படம் போலியானது என்று பல கட்டுரைகள் வெளியாகி இருந்ததும் தெரிந்தது. தொடர்ந்து தேடியபோது, இங்கிலாந்து அரசி அணிவகுப்பு படம் கிடைத்தது. ஆனால், அது இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை. இங்கிலாந்தில் வெளியாகும் தி டைம்ஸ் இதழில் உள்ளிட்ட பல இணையதளங்களில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. 1956ம் ஆண்டு நைஜீரியா சென்ற இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

thetimes.co.uk | Archived Link |
ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு மற்றும் 1956ம் ஆண்டு நைஜீரியாவில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அரசி படத்தை இணைத்து தவறான கருத்தை பகிர்ந்துள்ளது உறுதியானது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இங்கிலாந்து அரசிக்கு அணிவகுப்பு மரியாதை அளித்த ஆர்.எஸ்.எஸ்? ?
Fact Check By: Chendur PandianResult: False
