
500 ரூபாய் நோட்டுகளில் போலியான நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:

இந்த பதிவு ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு 500 ரூபாய் நோட்டின் புகைப்படதை, போலி என்றும், மற்றொரு 500 ரூபாய் புகைப்படத்தை ஓகே என்றும் எழுதி, பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’Pls do not accept Rs.500 Currency note on which the green strip is close to Gandhi ji because it’s fake. Accept a currency note where the strip is *near the Governor’s signature.* Please pass this message to all family and friends,’’ என ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். அதாவது, வாட்ஸ்ஆப்பில் வந்த ஃபார்வேர்ட் தகவலை எடுத்து, உண்மை போல பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என கண்டறிய, கூகுள் உதவியுடன் முதலில் ஆதாரம் தேடினோம். அப்போது, இது பழைய செய்தி என்றும், இதன்பேரில், ரிசர்வ் வங்கியே உரிய விளக்கம் அளித்துள்ளது என்றும், தகவல் கிடைத்தது.

அதாவது, 2016ம் ஆண்டில், மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இந்த பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு, புதிய ரூ.500 நோட்டுகளை அச்சடித்து, அவற்றை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. அப்போது, அவசரத்தில் அச்சடித்த காரணத்தால், தவிர்க்க முடியாத வகையில், ரூ.500 நோட்டுகளில், பச்சை நிற வாட்டர் மார்க் இடம் மாற நேரிட்டுள்ளது. இதையடுத்தே, ரூ.500 நோட்டுகளில் கள்ள நோட்டு புழக்கம் வந்துவிட்டதாக, வதந்தி பரவ தொடங்கியுள்ளது. ஆனால், இதனை ரிசர்வ் வங்கி அப்போதே மறுத்துள்ளது. இப்படி புழக்கத்தில் இருக்கும் நோட்டுகள் கள்ள நோட்டுகள் இல்லை என்றும், அவை உண்மையானவை, ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டவையே என்றும், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதொடர்பாக india.com வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். மேலும், ரூ.500 நோட்டில் கள்ள நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தால், அதனை எப்படி கண்டுபிடிப்பது என, ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது. அதனை படித்து பாருங்கள்.

இதுதொடர்பாக, ABP News வெளியிட்ட வீடியோ செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஏற்கனவே நமது மலையாளம் செய்திப் பிரிவு, உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, இதனை தவறு என நிரூபித்துள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு, தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
