
சிங்கப்பூர் நாட்டின் புதிய 10 லட்ச டாலர் நோட்டு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
சிங்கப்பூரின் ஒரு மில்லியன் டாலர் நோட்டு புகைப்படம் என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன் கீழ், “சிங்கப்பூரின் புதிய டாலர் வெளியீடு. இந்திய ரூபாய் மதிப்பில் 4.7 கோடி கோடி ரூபாய் ஒரே நோட்டில்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. இன்று ஒரு தகவல் என்று ஒரு லோகோவும் உள்ளது.
இந்த பதிவை, Namasivayam K என்பவர் 2019 ஆகஸ்ட் 29ம் தேதி வெளியிட்டுள்ளார். 2500-க்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
ஒரு மில்லியன் அதாவது 10 லட்ச டாலர் நோட்டை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளதா என்ற ஆச்சரியத்தை இந்த பதிவு ஏற்படுத்தியது. அதுவும் ஒரு சிங்கப்பூர் 10 லட்ச டாலர் நோட்டுக்கு இந்திய மதிப்பில் 4.7 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருக்கும் என்று கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அதனால்தான், இந்த அளவுக்கு இந்த தகவல் ஷேர் ஆகியுள்ளது போல.
அதே நேரத்தில் பண மதிப்பு அதிகமாக இருக்கும் நாடு, இவ்வளவு பெரிய தொகை நோட்டை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வளவு அதிக மதிப்புள்ள நோட்டை யார் பயன்படுத்துவார்கள், யாரிடம் கொடுத்து மாற்றுவார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.சிங்கப்பூரில் அதிகபட்ச டாலர் நோட்டு எது என்று ஆய்வு மேற்கொண்டோம். இந்தியாவில் ரிசர்வ் வங்கி இருப்பது போல, சிங்கப்பூருக்கு மானிட்டரி அத்தாரிட்டி ஆஃப் சிங்கப்பூர் என்ற அமைப்பு உள்ளது. அதன் இணையதளத்துக்குச் சென்று அது வெளியிடும் நோட்டுக்களை ஆய்வு செய்தோம். அதில் அதிகபட்சமாக சிங்கப்பூரில் வெளியாகும் டாலர் நோட்டின் மதிப்பு 10 ஆயிரம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Website Link | Archived Link |
அப்படி என்றால், இந்த நோட்டு போலியாக உருவாக்கப்பட்டதா, இது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று தேடினோம். டாலர் நோட்டு படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தில் உள்ள நோட்டு புகைப்படத்தை வைத்து ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது.

2013ம் ஆண்டு பதிவிடப்பட்டிருந்த அந்த செய்தியை படித்துப் பார்த்தோம். அதில், சிங்கப்பூரில் ஒருவர் மூன்று டாலருக்கு பொருள் வாங்கிவிட்டு, இந்த 10 லட்சம் டாலர் நோட்டைக் கொடுத்தாராம். கடைக்காரரும் அந்த பணத்தைப் பெற்றுக்கொண்டு சில்லறை மாற்றி மீதி டாலரை வழங்கினாராம். இதற்கு அவருக்கு ஏழரை மணி நேரம் ஆனதாம். இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், “சில்லறை மாற்றிக்கொடுக்க நீண்ட நேரம் ஆனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய கடையில் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சில்லறை தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வதில் கவனத்துடன் இருக்கிறேன்” என்றாராம். மேலும் நேரமானதின் காரணமாக அந்த வாடிக்கையாளருக்குக் கூடுதலாக கட்டணம் எதையும் பெறாமல் ஒரு மீன் உணவை வழங்கினாராம்.
இந்த செய்தி நம்பும்படி இல்லை… ஆனால், நியூ நேஷன் என்ற இணையதளம் எப்படி இதை வெளியிட்டது என்று புரியவில்லை. கமெண்ட் பகுதியைப் பார்த்தபோது, இந்த கட்டுரையை நம்புகிறவர்கள் அறிவற்றவர்கள் என்று இருந்தது. தொடர்ந்து கமெண்ட்களை பார்த்தபோது, இந்த இணையதளம் 50 சதவிகிதம் உண்மையான செய்தி என்று குறிப்பிட்டுள்ளதை கவனிக்காமல் பலரும் கமெண்ட் செய்துள்ளனர் என்று பதிவிட்டிருந்தார்.
Article Link | Archived Link |
அப்போதுதான், இணையதளத்தின் பெயரைப் பார்த்தோம். அதில் நியூ நேஷன் என்ற இணையதளத்தின் பெயருக்குக் கீழ் 50 சதவிகித உண்மை செய்தி என்று பெரிய எழுத்தில் எழுதியிருந்தனர்.
அந்த இணையதளத்தின் பின்னணியைப் படித்துப் பார்த்தோம். அதில், சிங்கப்பூரின் கேலி, கிண்டல் இணையதளம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

செய்திகளைக் கேலி, கிண்டலாக வெளியிடும் இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை எடுத்து, சிங்கப்பூரின் புதிய 10 லட்சம் டாலர் நோட்டு என்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சிங்கப்பூரின் புதிய 10 லட்ச டாலர் நோட்டு; ஃபேஸ்புக் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
