
‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதில் பாலிமர் டிவியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி பார்க்க உண்மை போலவே இருப்பதால், இதுபற்றி ஃபேஸ்புக்கில் வேறு யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளனரா என விவரம் தேடினோம். அப்போது, இது கடந்த சில ஆண்டுகளாகவே, வைரலாக பகிரப்படும் ஒரு செய்தி என்று தெரியவந்தது.
இதையடுத்து, இந்த செய்தியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளதா என்று தகவல் தேடினோம். ஆனால், எங்கேயும் அப்படியான தகவல் கிடைக்கவில்லை.
மாறாக, நமக்கு கிடைத்த செய்திகள் முற்றிலும் வேறு ஒன்றாக இருந்தன. ஆம், அதாவது, இந்து திருமணங்கள் சார்ந்த விதிமுறைகளில் திருத்தம் செய்து, கடந்த 2017ம் ஆண்டு பதிவுத் துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டது.
இதன்படி, பதிவுத் திருமணம் செய்துகொள்ளும் ஆண், பெண் இருவரும் தங்களது பெற்றோரின் அடையாள அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோரிடம் அனுமதி பெறாவிட்டாலும், அவர்களின் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை பெற்றோர் இறந்துவிட்டால், அதற்கான இறப்பு சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என, பதிவுத் திருமணச் சட்டத்தின் புதிய திருத்தம் சொல்கிறது.
இதுதவிர, 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் காதல் திருமணங்களுக்குச் சாதகமாகவும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் சில தீர்ப்பு விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதிலும், இப்படி பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்தால், சொத்தில் பங்கு இல்லை எனக் குறிப்பிடவில்லை.
இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) பாலிமர் டிவி அப்படி செய்தி வெளியிட்டதாக எதுவும் ஆதாரம் சிக்கவில்லை. அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற நியூஸ் கார்டு எதுவும் இல்லை.
2) இந்த நியூஸ் கார்டு மற்றும் குறிப்பிட்ட செய்தி கடந்த 2018 முதலாகவே டிரெண்டிங் ஆகி வருகிறது. ஆனால், இதில் உண்மையில்லை.
3) உச்ச நீதிமன்றம் காதல் திருமணம் பற்றி 2018ம் ஆண்டில் தீர்ப்பு வெளியிட்டிருக்கிறது. அது காதல் திருமணத்திற்குச் சாதகமானதாகவே உள்ளது.
4) பதிவுத் துறை தரப்பில் இந்து திருமணங்களுக்கான விதிமுறைகளில் சில திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, தவறான செய்தியை மீண்டும் மீண்டும் டிரெண்டிங் செய்து, ஃபேஸ்புக் பயனாளர்களை குழப்புகிறார்கள் என்று நமக்கு தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவைக் கண்டால் +91 9049044263 என்ற எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா?
Fact Check By: Pankaj IyerResult: False
