சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இணைந்த இஸ்ரேல் ராணுவம்?- ஃபேஸ்புக் வதந்தி
சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இஸ்ரேல் ராணுவம் இணைந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அயல் நாட்டு ராணுவ வீரர்கள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ராணுவத்துடன் இணைந்தது..... இஸ்ரேல் ராணுவம்..... பாரத் மாதகி ஜெய்...." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Bharath Bharath என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2020 மே 27ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய - சீனா இடையே லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்னை உள்ளது. தேசபக்தியை காட்டுகிறேன் என்று பலரும் பல வித பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். போர் பதற்றம் உள்ளது, ஆனால் போரில் இந்தியாவுடன் இஸ்ரேல் இணைந்தது போல் பதிவிட்டுள்ளனர். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ராணுவ ரீதியான நட்பு உள்ளது.
இஸ்ரேலிடமிருந்து அதிக ராணுவ தளவாடங்கள் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகின் எட்டாவது பெரிய ராணுவ தளவாட ஏற்றுமதியாளராக இஸ்ரேல் உள்ளது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேல் நாட்டில் இருந்தே இந்தியா அதிக அளவில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில் இந்தியா - சீனா விவகாரத்தில் இஸ்ரேல் கருத்து ஏதும் தெரிவித்துள்ளதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் சீனாவுடனான உறவை தொடர இஸ்ரேல் விரும்புவதாக செய்தி கிடைத்தது.
படத்தில் இருப்பவர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரா என்று பார்த்தோம். பார்க்க இஸ்ரேலியர்கள் போல இல்லை. எனவே, இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிந்தது. இவற்றில் முதலில் எடுக்கப்பட்டது எங்கே, இவர்கள் எந்த நாட்டினர் என்று கண்டுபிடிப்பது மிகவும் சவாலான பணியாக இருந்தது.
நீண்ட தேடலுக்குப் பிறகு 2017ல் வெளியான பதிவு ஒன்றில் இவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவ வீரர்கள் என்ற தகவல் நமக்கு கிடைத்தது. இதை உறுதி செய்ய, ஆப்கானிஸ்தான் வீரர்களின் ராணுவ உடையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ளவர்களின் ராணுவ உடையும் ஒன்றாக உள்ளதா என்று பார்த்தோம்.
அப்போது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் கைப் பகுதியில் உள்ள பேட்ஜும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ளவரின் கையில் உள்ள பேட்ஜும் ஒன்றாக இருப்பதை காண முடிந்தது. எனவே, இவர்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் என்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில்,
சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இஸ்ரேல் கூறவில்லை.
இந்திய ராணுவத்துடன் இணைந்து செயலாற்றுவோம் என்று இஸ்ரேல் அரசு கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
படத்தில் உள்ளவர்கள் இஸ்ரேல் ராணுவத்தினர் இல்லை, இந்திய ராணுவத்தினர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்திய ராணுவத்துடன் இஸ்ரேல் ராணுவமும் இணைந்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இணைந்த இஸ்ரேல் ராணுவம்?- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False