
‘’ரிஷி கபூர் சாகும் முன்பு எடுத்த கடைசி வீடியோ,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோவைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதேபோன்ற தகவலை பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 30, 2020 அன்று உயிரிழந்தார். இதையொட்டி, அவருக்கு பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து பதிவு வெளியிட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, சிலர் ரிஷி கபூரின் கடைசி நிமிடங்களில் எடுத்த வீடியோ, சாகும் போது கூட மகிழ்ச்சியாக இருந்துள்ளார், என்று கூறி மேற்கண்ட வீடியோவை பகிர தொடங்கினர்.
முதலில் இந்தி, ஆங்கிலத்தில் தொடங்கிய இந்த தகவல் படிப்படியாக, மற்ற மொழிகளுக்கும் பரவியது.
ஆனால், இவர்கள் குறிப்பிடும் வீடியோ ரிஷி கபூர் இறக்கும் முன்பு எடுக்கப்பட்டது இல்லை. இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டதாகும். இதனை ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடியபோது மேற்கண்ட வீடியோவின் உண்மை விவரம் யூடியூப் வழியே கிடைத்தது.
கடந்த பிப்ரவரி 3, 2020 அன்று DHEERAJ KUMAR SANU என்ற யூடியுப் பயனாளர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதன் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை எடுத்து, முன்னணி ஊடகங்கள் உள்பட பலரும் ரிஷி கபூரின் கடைசி நிமிட வீடியோ என தவறான தகவல் பகிர, அதனை மற்ற தனிப்பட்ட சமூக ஊடக பயனாளர்களும் பல்வேறு மொழிகளில் பகிர்ந்துள்ளனர்.
இன்னும் சொல்லப் போனால், இதுபற்றி ரிஷி கபூரே அவரது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பகிர்ந்திருக்கிறார். அதாவது, கடந்த பிப்ரவரி 3, 4 தேதிகளில் அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போதுதான் மேற்குறிப்பிட்ட நபர், அவரது ரசிகர் என்ற பெயரில் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்.
இதேபோல, மேலே உள்ள வீடியோவில் உள்ள நபர் இதுதொடர்பாக, ரிஷி கபூருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ரிஷி கபூர், ஏற்கனவே கடந்த பிப்வரி, 3, 2020ல் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி, வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை எடுத்து, தற்போது அவர் இறந்ததும் ஏப்ரல் 30, 2020 முதல் பலரும் சமூக ஊடகங்களில் ரிஷி கபூரின் கடைசி தருணம் என்று கூறி வதந்தி பரப்பி வருகின்றனர் என தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
