
சுஜித் என்ற பெயரில் வேறொரு சிறுவனின் புகைப்படம் தவறான முறையில் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன் மீது உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
என்பவர் இந்த பதிவை அக்டோபர் 29, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், சுஜித் என்ற பெயரில் ஒரு சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரைப் போலவே பலரும் இந்த சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து, சுஜித்துக்கு இரங்கல் தெரிவித்து வருவதைக் காண முடிந்தது.
உண்மை அறிவோம்:
இன்றைய சூழலில், ஃபேஸ்புக், ட்விட்டர் வருகையால் ஏதேனும் ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அது உடனடியாக உலகம் முழுக்க பரபரப்பாக பகிரப்படுவது வழக்கமாகியுள்ளது. அப்படி பகிரப்படும் தகவலில் தவறான தகவல், புகைப்படம் அல்லது வீடியோவும் இணைத்து பகிரப்படுவதால், எது உண்மை, எது தவறான தகவல் என்ற உண்மை தெரியாமல் சாமானிய மக்கள் குழம்பும் நிலை ஏற்படுகிறது.
சமீபத்தில் தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பரிதாபத்தை ஏற்படுத்திய சம்பவம், சுஜித் என்ற 2வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, உயிரிழந்ததாகும். இதில் சுஜித்தின் உண்மையான புகைப்படத்தை பகிர்ந்து சிலர் இரங்கல் தெரிவித்த நிலையில் பலர் வேறொரு சிறுவனின் புகைப்படத்தையும் இந்த இரங்கல் கதையுடன் சேர்த்து பகிர தொடங்கியுள்ளனர்.
முரசொலி பத்திரிகை மற்றும் நியூஸ் ஜே போன்ற தொலைக்காட்சிகள் வெளியிட்ட செய்தியில் இத்தகைய தவறான புகைப்படம் இடம்பெறவே, அது சாமானிய மக்களுக்கும் பரவி விட்டது. முரசொலி செய்தியை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
Webdunia News Link | Archived Link |
இதேபோல, நியூஸ் ஜே தொலைக்காட்சியும் தவறான புகைப்படத்தை பகிர்ந்து சுஜித்திற்கு இரங்கற்பா பாடியதன் மூலமாக, சாமானிய வாசகர்களை குழப்பியது. பிறகு அந்த பதிவை நியூஸ் ஜே நீக்கியது. ஆனால், அதற்கும் முன்பே அந்த புகைப்படம் பலரிடையே பரவிவிட்டது.
Facebook Link | Archived Link |
இப்படி முன்னணி ஊடகங்களே குழப்பிய இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவனின் உண்மையான பெயர் நித்திஷ். அந்த சிறுவனின் புகைப்படத்தை பலரும் தவறாக பகிர்ந்து இரங்கல் தெரிவிப்பது பற்றி அவனது பெற்றோர் கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளனர்.
இதுபற்றி Etv Bharat Tamil மற்றும் புதியதலைமுறை உள்ளிட்டவை செய்தி பகிர்ந்துள்ளன.
Etv Bharat Tamil News Link | Puthiyathalaimurai Link |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) முரசொலி, நியூஸ் ஜே போன்ற முன்னணி ஊடகங்கள் தவறான புகைப்படத்தை பகிர்ந்தது மட்டுமின்றி அதற்கு இரங்கற்பா பாடியுள்ளன. இதனை சாமானிய மக்கள் உண்மை என நம்பிவிட்டனர்.
2) உண்மையான சிறுவனின் பெற்றோர் இதுபற்றி கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.
3) சுஜித்தின் புகைப்படம் வேறு. இவர்கள் பகிரும் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு.
4) சுர்ஜித் வில்சன் என்ற பெயரை சுஜித், சுஜித் என சில ஊடகங்கள் தவறாக எழுத, அதுவே தற்போது உண்மையான பெயர்போல மாறிவிட்டது. சுஜித் என்று எழுதினால்தான் பலருக்கும் உண்மை புரிகிறது. நாமும் இதையே பின்பற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
5) முன்னத்தி ஏர்களாகக் கடமையாற்ற வேண்டிய தமிழ் ஊடகங்கள் அவசர கோலத்தில் தவறான, அலங்கோலமான தகவல்களை பகிர்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இந்த விவகாரம் சரியான உதாரணம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்பட பதிவு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
