தமிழ்நாடு கல்வித்தரம் பற்றி ரமேஷ் போக்ரியால் விமர்சித்ததாக பரவும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

நீட், ஜெ.இ.இ தேர்வை ரத்து செய்தால் தமிழகத்தில் உருவானது போல தரமற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகிவிடுவார்கள் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாணவர்கள் கோரிக்கைகளை ஏற்று நீட், ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்தால் தேசம் முழுவதும் தமிழ்நாட்டில் சென்ற பத்தாண்டுகளில் உருவானது போல தரமற்ற மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உருவாகிவிடுவார்கள். தகுதி மற்றும் தரம் எல்லாவற்றையும் விட முக்கியம் – ரமேஷ் போக்ரியால்” என்று உள்ளது. அதன் கீழ், மருத்துவத்தில் வித்தகராக உள்ள வடக்கித்தியன்தான் கோமியத்தை குடித்து, கோபரை தின்றால் கொரோனா குணமாகும் என்கிறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Raja Monickam என்பவர் ஆகஸ்ட் 26, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் தமிழகத்தில் இருப்பதாக மத்திய அரசின் ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ தர வரிசை பட்டியல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் தரமற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாவதாக எப்படி கூற முடியும்… ஏற்கனவே தமிழகத்துடன் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில் இப்படி ஒரு கருத்தை வெளியிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பலரும் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். 

முதலில், மத்திய கல்வித் துறை (மனித வள மேம்பாட்டுத்துறை) அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அப்படி கூறினாரா என்று ஆய்வு செய்தோம். அமைச்சரின் ட்விட்டர் பக்கம், அமைச்சர் தொடர்பான செய்திகளை ஆய்வு செய்த போது அப்படி எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மையில் கதிர் செய்திகள் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு அவர்கள் பதிவு வெளியிட்டிருந்து நமக்கு கிடைத்தது.

Facebook LinkArchived Link

இதன்மூலமாக, கதிர் செய்திகள் பெயரில் சிலர் வேண்டுமென்றே போலியான நியூஸ் கார்டை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாக தெளிவாகிறது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் தரமற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகியுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியதாக பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபித்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழ்நாட்டின் கல்வித்தரம் பற்றி ரமேஷ் போக்ரியால் விமர்சித்ததாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False