
‘’உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க காசில்லாததால் இறந்த மனைவியின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டிய அப்பா, மகன்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

தட்டிக் கேட்போம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சடலம் ஒன்றின் கை, கால்களை சிலர் முறித்து, மூட்டை கட்டும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’உத்திர பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க பணம் இல்லாததால் இறந்த மனைவியின் உடலின் கை கால்களை ஒடித்து மடக்கி மூட்டை கட்டி சுமந்து செல்லும் அப்பாவும், மகனும்… டிஜிட்டல் இந்தியா ஹே,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் செய்தி உண்மையா எனக் கண்டறியும் நோக்கில், அந்த புகைப்படத்தை முதலில் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது 2016ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என தெரியவந்தது.

இதன்படி, ஒடிசாவி பலாசூர் பகுதியில் உள்ள சோரோ ரயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அடிபட்டு இறந்துவிட்டார். இதையடுத்து, அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக, 2 பேரை கூலிக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால், அந்த நபர்கள் ஆம்புலன்ஸ் வர மிகவும் தாமதமான காரணத்தினால், அவர்களாகவே தன்னிச்சையாக, குறிப்பிட்ட மூதாட்டியின் சடலத்தை கை, கால் ஒடித்து துணி மூட்டையில் மடக்கி கட்டி, மூங்கில் குச்சியில் வைத்து சுமந்து சென்று, கலாஹாண்டி என்ற பகுதியில் வசிக்கும் அந்த மூதாட்டியின் மகளிடம் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரம் ஊடகங்களில் செய்தியாக வெளியான பின்னர்தான், இதில் நிகழ்ந்த கொடூரம் வெளியே தெரியவந்துள்ளது. அதுதவிர, மூதாட்டியின் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றிச் செல்ல அதிக செலவாகும் என்பதால் போலீசாரே இதனை கண்டும் காணாமல் விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த சம்பவத்தின் வீடியோ செய்தி, கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, தகவலை சரிபார்க்காமல், ஒடிசாவில், 2016ம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவத்தை உத்தரப் பிரதேசத்துடன் இணைத்து, தவறான தகவல் பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:உத்தரப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டினார்களா?
Fact Check By: Pankaj IyerResult: False
