
கேரளாவில் காதல் என்கின்ற பெயரில் பூங்காவில் சுற்றிய பெண்களை போலீசார் தாக்கினார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பொது இடத்தில் பெண் ஒருவரை காவல் துறை அதிகாரி தாக்குவது போன்று புகைப்படங்கள் கொலாஜ் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “காதல் என்கின்ற பெயரில் ‘பார்க்கில்’ சுற்றிய மாணவிகளை நல்வழிப்படுத்தும் சூப்பர் லேடி போலிஸ்…தமிழ்நாட்டில் இல்லை.. கேரளாவில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “அப்போ கூட கூட்டிட்டு சுத்தன #மாணவர்களை எல்லாம் நல்வழிப்படுத்த மாட்டீங்களா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Sathish Sathi என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்பட பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கேரளாவில் பூங்காவுக்கு வந்த காதலர்களை போலீசார் தாக்கியதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். கேரளாவில் சமீபத்தில் இப்படி ஏதும் சம்பவம் நடந்ததா என்று தேடினோம். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் இப்படி நடந்து கொண்டதாகவும்5 அதை, பாதிக்கப்பட்டவர்கள் ஃபேஸ்புக் லைவ் மூலம் நேரலை செய்ததாகவும், அதைத் தொடர்ந்து இந்த பிரச்னை பெரிய அளவில் உருவெடுத்தது என்றும் செய்தி கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive
இந்த புகைப்படங்கள் கேரளாவில் எடுக்கப்பட்டதா என்று அறிய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2013ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில், செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியில், 2013ம் ஆண்டு இந்தூரில் உள்ள பூங்காவில் காதலர்களை போலீசார் அடித்ததாக குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: naidunia.com I Archive
இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடும், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவு வழங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் அந்த காவலர்கள் மீது மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போன்று டெல்லியில் போலீசார் சமூக நல்லொழுக்க காவலர்களாக மாறி காதலர்கள் மீது நடவடிக்கை எடுத்த போது, ஒரு வழக்கறிஞர் அவர்களுக்காக பேசினார் என்று ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதன் முகப்பு படமாக இந்த புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தனர். இப்படி பல வீடியோக்கள், செய்திகளில் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. பல செய்திகளில் இந்தூரில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பது போன்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் அத்துமீறும் காதலர்கள் மீது இப்படியான போலீஸ் நடவடிக்கை தமிழ்நாட்டிலும் அவ்வப்போது நடந்து கொண்டேதான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள வ.உ.சி பூங்காவில் காதல் ஜோடிகளை திருப்பூர் வடக்கு போலீசார் பிடித்து ஒரே இடத்தில் வைத்து விசாரணை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லா ஊர்களிலும் இப்படி போலீசார் அத்துமீறி செயல்படுவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்படி நடக்காதது போன்று பதிவிட்டுள்ளனர்.
இந்தூரில் ஒரு பூங்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று பகிரப்பட்டு வந்த புகைப்படத்தை எடுத்து, கேரளாவில் காதல் ஜோடிகளில் பெண்களை நல்வழிப்படுத்திய கேரள போலீஸ் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
கேரளாவில் பூங்காவுக்கு வந்த காதலர்களை போலீசார் தாக்கினர் என்று பரவும் படம் 2013ல் இந்தூரில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:காதலர்களை கண்டித்த கேரள போலீஸ் என்று பரவும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
