கால்பந்தாட்ட வீராங்கனை மரணம்; பா.ஜ.க நிர்வாகியிடம் விசாரணை என்று பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவை இரண்டு நாட்களுக்கு முன்பு பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் சந்தித்தார் என்றும் அவரை போலீஸ் விசாரித்து வருகிறது என்றும் நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பா.ஜ.க நிர்வாக அமர் பிரசாத் ரெட்டி புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக பிரமுகரிடம் விசாரணை. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியிடம் விசாரணை. இரண்டு நாட்களுக்கு முன் பிரியா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்றது குறிப்பிடத்தக்கது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை Stalin Venkatesh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 நவம்பர் 15ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Archive

இதே போன்று நியூஸ்7 தமிழும் நியூஸ் கார்டு வெளியிட்டதாக பகிரப்பட்டு வருகிறது. ManasaSangeeth என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் புதிய தலைமுறை, நியூஸ்7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, மருத்துவர்களின் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக உயிரிழந்தார். இது தொடர்பாக இரண்டு மருத்துவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பிரியாவை தமிழ்நாடு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் சந்தித்ததாகவும், அதைத் தொடர்ந்து பிரியா உயிரிழந்தது போன்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பிரியாவை, தமிழ்நாடு பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். அதையும் பிரியாவின் மரணத்தையும் முடிச்சிப் போட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. 

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் போல இல்லை. மேலும், அதன் பின்னணி டிசைன் வித்தியாசமாக இருந்தது. மேலும் அமர்பிரசாத் ரெட்டியை போலீஸ் விசாரிப்பதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இது போலியானது என்று தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை நவம்பர் 15, 2022 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு எதுவும் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இதைத் தொடர்ந்து இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தோம். அவரும் இது போலியானது என்று தெரிவித்தார். சற்று நேரத்தில் புதிய தலைமுறையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டுப் பதிவை வெளியிட்டிருந்தனர்.

நியூஸ்7 தமிழில் இந்த நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால், அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்விட்டர் பதிவில் உள்ளது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.

இதன் மூலம் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவை சந்தித்த பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியிடம் போலீஸ் விசாரணை நடத்துகிறது என்று பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கால்பந்தாட்ட வீராங்னை பிரியா மரணம் தொடர்பாக பாஜக நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கால்பந்தாட்ட வீராங்கனை மரணம்; பா.ஜ.க நிர்வாகியிடம் விசாரணை என்று பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False