வங்கதேசத்தில் இஸ்கான் சாமியாருக்காக வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர் கொல்லப்பட்டாரா?

சர்வதேசம் | International

வங்கதேசத்தில் இஸ்கான் சாமியார் சின்மாய் பிரபுதாஸை ஜாமீனில் விடுவிக்க வாதாடிய இஸ்லாமிய வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரிப்பப்ளிக் ஊடகம் வௌியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “அண்டை நாடான பங்களாதேஷில் ஹிந்துக்களின் உரிமைக்காக போராடி வந்த இஸ்கான் துறவி சின்மாய் பிரபு தாஸ் அவர்களை டாக்கா விமான நிலையத்தில் வங்கதேச காவல் துறையினர் கைது செய்தனர்.

அவரை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடிய சைஃபுல் இஸ்லாம் அலிஃப் என்ற இளம் வழக்குரைஞர் சட்டோகிராம் நீதிமன்ற வளாகத்தின் வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட் டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் இஸ்கான் அமைப்பிலிருந்து விலகி தற்போது சமிலிதா சனாதனி ஜோட் என்னும் ஹிந்து அமைப்பின் தலைவராக உள்ள சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி என்பவரை வங்கதேச போலீசார் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, அவரது ஆதரவாளர்கள் கிருஷ்ணதாஸை விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். ஆனால் நீதிமன்றம் அவரை சிறையில் அடைத்தது. இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது.

இந்த நிலையில், இஸ்கான் சாமியாருக்காக ஆஜரான இஸ்லாமிய வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டார் என்று இந்திய செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அதை பலரும் சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். கூகுளில் இஸ்கான், சினமாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, வழக்கறிஞர், கொலை என சில அடிப்படை வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது இது தொடர்பாக வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: prothomalo.com I Archive

இந்திய ஊடகங்களில் வந்த செய்தியைத் தவிர்த்துவிட்டு, வங்கதேச ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்தோம். அதில் அரசு உதவி வழக்கறிஞர் சைபூல் இஸ்லாம் என்பவர் கொல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூகுளில் சின்மாய் கிருஷ்ண தாஸ் வழக்கறிஞர் யார் என்று தேடிய போது, சுபாசிஷ் ஷர்மா என்பவர் ஆஜரானர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிபிசி வங்க மொழி கட்டுரையிலும் சாமியாரின் வழக்கறிஞர் சுபாசிஷ் ஷர்மா என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

தொடர்ந்து தேடிய போது வங்கதேச அரசின் ஃபேக்ட் செக் அமைப்பான CA Press Wing Facts வெளியிட்டிருந்த பதிவு நமக்குக் கிடைத்தது. அதில், ரிபப்ளிக் வெளியிட்ட செய்தியை ஃபேக் என்ற முத்திரையுடன் பதிவிட்டிருந்தனர். அந்த பதிவில், “சில இந்திய ஊடகங்கள் சின்மாய் கிருஷ்ண தாசுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் சைபூல் இஸ்லாம் அலிப் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது, தவறான செய்தி. 

சின்மாய் கிருஷ்ண தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் வக்காலத்தில் அவரது வழக்கறிஞர் என்று சுபாசிஷ் ஷர்மா என்பவரின் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பொய்யான கோபமூட்டும் வதந்திகளையும் தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுடன் சாமியார் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நகலையும் அவர்கள் பதிவிட்டிருந்தனர்.

இந்த ஆதாரங்கள் எல்லாம் கொல்லப்பட்ட வழக்கறிஞர் சாமியார் சின்மாய் கிருஷ்ண தாசுக்காக ஆஜரானவர் இல்லை என்பது உறுதி செய்கின்றன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வங்கதேசத்தில் சாமியார் சின்மாய் கிருஷ்ணதாசுக்காக ஆஜரான வழக்கறிஞர் கொல்லப்பட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:வங்கதேசத்தில் இஸ்கான் சாமியாருக்காக வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர் கொல்லப்பட்டாரா?

Written By: Chendur Pandian  

Result: False