
வங்கதேசத்தில் இந்து மாணவரை இஸ்லாமிய மாணவர் தாக்குகிறார் என்றும் அதனால் பாஜக-வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மாணவர் ஒருவரை ஏராளமான மாணவர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷ் இந்து மாணவரின் நிலையை பாருங்கள் இந்த நிலை தமிழகத்தில் எப்போது வேனாலும் வரலாம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே நம் வாக்குரிமையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா பார்ட்டிக்கு வாக்களித்து வெற்றி பெற வேண்டும் அதுவே ஒவ்வொரு இந்திய இந்துக் குடிமக்களின் தலையாய கடமையாகும் ஜெய்கிந்த்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல தெரியவில்லை. அங்கு இந்துக்கள் தாக்கப்படுவதற்கு எதற்காகத் தமிழ்நாட்டில் பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த விவகாரத்திற்குள் நாம் செல்லவில்லை. இந்து மாணவரை இஸ்லாமியர்கள் தாக்கியதாக பரவும் வீடியோ உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
வீடியோவில் தாக்கப்படும் மாணவர் இந்து என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. பார்க்கும் போது மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போலத் தெரிகிறது. ஏற்கனவே, வங்கதேசம் தொடர்பாக தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால், இந்த வீடியோவையும் ஆய்வு செய்து பார்த்தோம்.
வீடியோவில், டாக்டர் மஹ்புபுர் ரஹ்மான் மொல்லா கல்லூரி (Dr Mahbubur Rahman Mollah College) என்று பெயர்ப் பலகை தெளிவாகத் தெரிந்தது. இதன் அடிப்படையில் மஹ்புபுர் ரஹ்மான் மொல்லா கல்லூரி மாணவர்கள் தாக்குதல் என்று சில அடிப்படையான வார்த்தைகளைக் கூகுள் தளத்தில் பதிவிட்டு தேடினோம். அப்போது அங்கு நடந்த மாணவர்கள் மோதல் தொடர்பான செய்திகள் நமக்குக் கிடைத்தன.
மஹ்புபுர் ரஹ்மான் கல்லூரி மாணவர் ஒருவர் டாக்கா மருத்துவக் கல்லூரியில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மஹ்புபுர் ரஹ்மான் கல்லூரி மாணவர்கள் மருத்துவக் கல்லூரி மற்றும் ஷாஹீத் சுஹ்ரவர்தி கல்லூரியைத் தாக்கி, பொருட்களை சூறையாடியுள்ளனர். இதற்கு பதிலடியாக அந்த கல்லூரி மாணவர்கள் மஹ்புபுர் ரஹ்மான் கல்லூரிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: prothomalo.com I Archive I daily-sun.com I Archive
ஷாஹீத் சுஹ்ரவர்தி கல்லூரியின் பங்களா துறை மாணவர் பிஜோய் அகமது இந்த தாக்குதல் குறித்து வங்கதேச ஊடகமான prothomalo.com-க்கு அளித்திருந்த பேட்டியில், “மஹ்புபுர் ரஹ்மான் மொல்லா கல்லூரி மாணவர்கள் எங்கள் கல்லூரியை நாசப்படுத்திச் சூறையாடினர். அதற்கு பழிவாங்க வந்தோம். நாங்கள் மொல்லா கல்லூரிக்குள் நுழைந்து, கிடைத்ததை எடுத்துச் சென்றோம்” என்று கூறியிருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வங்கதேச ஊடகங்களில் விரிவான செய்திகள் வெளியாகி உள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோக்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அதில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது, கல்லூரி வளாகங்கள் சூறையாடப்பட்டிருப்பது, பொருட்கள் திருடிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இவற்றைப் பார்க்கும் போது இது இந்து மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என்பதும், இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தான் என்பதும் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
வங்கதேசத்தில் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோவை எடுத்து இந்து மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:வங்கதேசத்தில் இந்து மாணவர்கள் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
