
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தி.மு.க-வில் இணைந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பூங்கொத்து அளிக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “விஜயின் புலி பட கதாநாயகி ஸ்ருதிஹாசனின் தந்தை கமலஹாசன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் மற்றும் தகவலை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தி.மு.க-வில் இணைந்துவிட்டதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லாத சூழலில், குறிப்பிட்டவர்களுக்கு எதிராக வதந்தியை பரப்பும் நோக்கில் இந்த பதிவு வெளியிடப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
இந்த வதந்தியையும் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரவே, இந்த தகவல் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் ஆய்வு செய்தோம். முதலில் கமல்ஹாசன் தன்னுடைய கட்சியைக் கலைத்துவிட்டு அல்லது தன்னுடைய கட்சியை தி.மு.க-வுடன் இணைக்க அறிவிப்பு ஏதும் செய்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி ஒரு தகவல் இருப்பது போன்று கிசுகிசு கூட பத்திரிகைகளில் வெளியாகவில்லை.
அடுத்ததாக இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம். நம்முடைய தேடலில் இந்த புகைப்படத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2025 மே மாதம் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டிருந்ததை கண்டறிந்தோம். அதில், “கழக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் @maiamofficial வேட்பாளராக போட்டியிடவுள்ள அக்கட்சியின் தலைவர் கலைஞானி @ikamalhaasan சார், கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை அண்ணா அறிவாலயத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வில் நாமும் உடனிருந்தோம். அன்போடு வாழ்த்தி மகிழ்ந்தோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இந்த புகைப்படம் கமல்ஹாசன் தி.மு.க-வில் இணைந்த போது எடுத்த படம் இல்லை என்பது உறுதியானது.
கமல்ஹாசன் தி.மு.க-வில் இணைந்தார் என்று பகிரப்படும் வதந்தி தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகியிடம் பேசினோம். அவரும், “இது விஷமிகள் பரப்பும் வதந்தி. இதில் உண்மையில்லை. தி.மு.க கூட்டணியில் உள்ளோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வதந்தி பரப்பியுள்ளனர்” என்றார். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்தது.
முடிவு:
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்ற அறிவிப்புக்குப் பிறகு மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்த புகைப்படத்தை வைத்து தி.மு.க-வில் இணைந்த கமல்ஹாசன் என்று தவறாக வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“தி.மு.க-வில் இணைந்த கமல்ஹாசன்” என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


