
இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை என்று பேசுபவர்கள் எல்லாம் ஆன்டி இந்தியன்ஸ், மோடி எதிர்ப்பாளர்கள் என்ற வகையில் மத்திய நீர் சக்தித் துறை அமைச்சர் பேசியதாக தமிழ் குட் ரிட்டர்ன்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மொதல்ல Anti Indian மாதிரி தண்ணி இல்லன்னு பொய் சொல்வதை நிறுத்துங்க..! நிறைய தண்ணி இருக்கு! சொல்வது பாஜக அமைச்சர்! #Water #Waterscarcity
மத்திய நீர் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை. மீடியாக்கள் பொய் சொல்கின்றன. தண்ணீர் இல்லை என்று ஆன்டி இந்தியன் போல, மோடி எதிர்ப்பாளர் போலப் பேசாதீர்கள்” என்று கூறியது போன்று பதிவிடப்பட்டுள்ளது.
2019 ஜூன் 14ம் தேதி Tamil GoodReturns இதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
“சமீபத்தில் சம்பள உயர்வு வாங்கிக் கொண்டு, பாராளுமன்ற கேண்டீனில் மலிவு விலையில் ஆட்டுக் கால் பாயா, வான் கோழி பிரியாணி, பிஸ்லெரி தண்ணீர் குடித்து விட்டு, டெல்லி வெயில் உடம்பில் படாமல், எம்பிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் சொகுசாக 21 டிகிரி ஏசியில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கும் மந்திரிகளில் ஒருவர், மக்களை வெறுப்பேத்தும் விதத்தில் பொன் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்” என்று தொடங்குகிறது இந்த செய்தி. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இந்த செய்தியில் குறிப்பிட்டது போன்று அவர் சொகுசு வாழ்க்கை வாழ்கிறாரா என்று எல்லாம் நாம் ஆய்வுக்குள் இறங்கவில்லை.

தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை பற்றி என்ன சொல்லியிருக்கிறார், அது உண்மைதானா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த செய்தியில், “தமிழகத்தில் எல்லாம் தண்ணீர் நன்றாகத் தான் இருக்கிறது. தண்ணீர் இல்லை, தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது எனச் சொல்வதெல்லாம் மீடியாக்களின் பொய் பிரசாரம்” என வழக்கம் போல ஆண்டி இந்தியன் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். மக்களின் வேதனையை புரிந்து கொள்ளாமல் பேசி இருக்கிறார் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர செகாவத்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் சமீபத்திய பேட்டிகளை ஆய்வு செய்தோம். 2019 ஜூன் 12ம் தேதி அவர் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தது தெரிந்தது.
அதில், 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று அவர் பேட்டி அளித்துள்ளார். அப்போது தண்ணீர் பற்றாக்குறை பற்றிக் கேட்டுள்ளனர். அதற்கு, மீடியாக்கள் மிகைப்படுத்தி சொல்லும் அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தியா டுடேவில் வெளியான பேட்டியில், “இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியா மற்றும் நாடு முழுக்க அணைக்கட்டுகளில் போதுமான தண்ணீர் இருக்கிறது. ஊடகங்கள் மிகைப்படுத்திச் சொல்லும் அளவுக்கு எல்லாம் தண்ணீர் பற்றாக்குறை இல்லை” என்று கூறியதாக இருந்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியிலும் கூட, “நாட்டின் அணைக்கட்டுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை என்பது ஊடகங்களால் பரப்பப்படும் தவறான தகவல்” என்று அமைச்சர் கூறியதாக உள்ளது.
டிஎன்ஏ-வில் அவர் அளித்த பேட்டி வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று அவர் கூறியதாக இல்லை என்று இந்தி தெரிந்தவர்கள் உறுதி செய்துள்ளனர். தமிழ்நாடு என்ற வார்த்தையையே அவர் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த வீடியோ முழு பேட்டியின் வீடியோ இல்லை என்றாலும் கூட, தண்ணீர் பஞ்சம் என்பவர்கள் தேச விரோதிகள் என்று கூறியிருந்தால் நாடு முழுவதும் மிப்பெரிய பிரச்னையாக அது பேசபட்டிருக்கும். அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த செய்தியிலும், தமிழகத்தை மட்டும் குறிப்பிட்டு அவர் பேட்டி அளித்ததாக இல்லை. அவர் பொதுவாக நாடு முழுவதும் தண்ணீர் உள்ளது என்று மட்டுமே பேட்டி அளித்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறை என்று பேசுபவர்கள் ஆன்டி இந்தியன் என்றோ, மோடிக்கு எதிரானவர்கள் என்றோ, மோடி ஆட்சியில் தண்ணீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றோ அவர் கூறவில்லை.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
- அமைச்சர் பேட்டி கிடைத்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் தண்ணீர் போதுமான அளவு உள்ளது என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு அவர் எதுவும் பேசவில்லை.
- தண்ணீர் பற்றாக்குறை என்பது மீடியாக்கள் சொல்லும் அளவுக்கு மோசமாக இல்லை என்று சொல்லியிருக்கிறாரே தவிர, தண்ணீர் பற்றாக்குறையே இல்லை என்று அவர் பேட்டி அளிக்கவில்லை.
- தண்ணீர் பற்றாக்குறை என்று சொல்பவர்கள் ஆன்டி இந்தியன்கள், மோடிக்கு எதிரானவர்கள் என்ற வகையில் அவர் எதுவும் பேசவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், குட் ரிட்டர்ன்ஸ் வெளியிட்ட செய்தி தவறானது, விஷமத்தனமானது என்று நிரூபிக்கப்படுகிறது.
தமிழகம் மட்டுமல்ல… இந்தியா முழுவதுமே மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில், தண்ணீர் பற்றாக்குறை ஊடகங்கள் மிகைப்படுத்தி சொல்லும் அளவுக்கு மோசமாக இல்லை என்று ஒரு மத்திய அமைச்சர் கூறியிருப்பதே மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடியதுதான். இந்த உண்மையை மட்டுமே சொல்லியிருந்தால் போதுமானதாக இருக்கும்.
ஆன்டி இந்தியன், மோடி எதிர்ப்பு என்று சொல்லாத விஷயங்களை கூறி, மக்களை தங்கள் இணையதளம் பக்கம் திசைதிருப்பும் வேலையைச் செய்திருக்க வேண்டியது இல்லை. டைப் செய்ய கம்ப்யூட்டர் இருக்கிறது என்று என்ன வேண்டுமானாலும் டைப் செய்வது சரியாக இருக்காது. ஊடக அறம் என்று உள்ளது… அதை விட்டுவிடாமல் செய்திகளை வெளியிடுவதே ஊடகவியலாளருக்குப் பெருமையாக இருக்கும்!
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட செய்திகள் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:Anti Indians மாதிரி தண்ணீர் இல்லை என்று பொய் சொல்வதை நிறுத்துங்கள்! – மத்திய அமைச்சர் பேட்டி உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
