வங்கதேசத்தில் இந்துக்களின் கூடாரம் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
வங்கதேசத்தில் வீடுகளை இழந்து கூடாரங்களில் வசிக்கும் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கூடாரங்களில் வசிக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பங்களாதேஷில் கூடாரங்களில் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் நடத்தும் கொலை வெறி தாக்குதல் இந்து எதிராக இனப்படுகொலையைக் கொண்டாடி வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்கதேசத்தில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமாக இருந்த போது, இந்தியாவில் டெல்லிக்கு அருகே உள்ள காசியாபாத்தில் டென்டில் வசித்துவந்த இஸ்லாமியர்கள் வங்கதேசத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறி தாக்கப்பட்டனர். ஆனால், இந்தியாவில் வங்கதேச இஸ்லாமியர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது என்று தீவிர வலதுசாரிகள் இந்த வீடியோவை வைரல் ஆக்கினர்.
இந்நிலையில் அதே வீடியோவை தற்போது எடுத்து, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் தவறானது என்பதையும் இந்த சம்பவம் இந்தியாவில் காசியாபாத்தில் நடந்தது என்பதையும் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
கூகுளில் காசியாபாத், வங்கதேசம், இந்துத்துவா, தாக்குதல் என சில அடிப்படை வார்த்தைகளை பயன்படுத்தித் தேடினோம். அப்போது, இந்த சம்பவம் காசியாபாத்தில் நடந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் பல செய்திகள், சமூக ஊடக பதிவுகள் நமக்குக் கிடைத்தன.
உண்மைப் பதிவைக் காண: freepressjournal.in I Archive 1 I vinavu.com I Archive 2
காசியாபாத்தில் வங்கதேச அகதிகள் வசிப்பதாக கூறி தீவிர இந்துத்துவா அமைப்பினர் அங்கு சென்று தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் அவர்கள் உண்மையில் வங்கதேச அகதிகள் இல்லை என்றும் அவர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தவர்கள்தான் என்றும் காசியாபாத் போலீஸ் கமிஷனர் தெரிவித்ததாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காசியாபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்ததும் நமக்குக் கிடைத்தது. இவை எல்லாம் இந்த சம்பவம் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்தது இல்லை, இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் நடத்திய தாக்குதல் என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
டெல்லி அருகே காசியாபாத்தில் கூடாரம் அமைத்து வசித்து வந்த இஸ்லாமியர்களை வங்கதேச முஸ்லிம்கள் என்று குற்றம்சாட்டி இந்துத்துவா அமைப்பினர் தாக்கிய வீடியோவை, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இஸ்லாமியர்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:வங்கதேசத்தில் இந்துக்களின் கூடாரம் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False