எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

Partly False சர்வதேசம் | International

எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி என்ற எரிமலை வெடித்தது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வான் உயரத்துக்கு கரும்புகை எழும் வீடியோ காட்சி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”இருளில் சூழும் இந்தியா” “10,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை இந்தியாவை நோக்கி 100-120 கிமீ வேகத்தில் எரிமலையின் சாம்பல் வந்துகொண்டிருக்கிறது. இரவு 10 மணிக்குள் இந்தியாவை அடையும் எரிமலை சாம்பலால் வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும். இந்திய வானிலை ஆய்வு மையம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலை நவம்பர் 23ம் தேதி வெடித்தது. இந்த எரிமலையிலிருந்து எழும் தூசு, புகை வட இந்தியாவின் பல பகுதிகளுக்கு பரவலாம் என்று செய்தி வெளியானது. இந்த நிலையில் வெடித்துச் சிதறிய ஹேலி குப்பி எரிமலை என்று குறிப்பிட்டு காணொளியைச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றன. இது எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை வெடிப்பு வீடியோவா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்தோனேஷியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு என்று குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் முழுமையான காட்சிகளை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். அதில் அந்த பகுதி மக்களையும் காண முடிந்தது. அவர்கள் தென்கிழக்கு ஆசியப் பகுதி மக்களைப் போல இருந்தனர். இதனால், இந்த வீடியோ இந்தோனேஷியாவைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று தெரிந்தது.

Archive

மேலும், நவம்பர் 19ம் தேதியே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்தது. அதாவது, எத்தியோப்பியா எரிமலை வெடிப்புக்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. தொடர்ந்து தேடியபோது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் வெளியான செய்திகளும் நமக்குக் கிடைத்தன. 

அவற்றில் இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவுகளில் உள்ள செமேரு எரிமலை நவம்பர் 19, 2025 அன்று வெடித்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு வீடியோ இல்லை என்பதை உறுதி செய்தன.

முடிவு:

இது இந்தோனேஷியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் வீடியோ எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result:Partly False

Leave a Reply