
தாய்லாந்தில் மலைகளுக்கு நடுவே ஓடும் ஆற்றில் ஓம் என்று உச்சரித்தால், ஆற்று நீர் மலையின் உயரத்தை விட அதிகமாக மேலே பீறிட்டு எழுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் வாட்ஸ் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். வீடியோவில் சிறுமி ஒருவர் “ஆ” என்று கத்துகிறார். அவர் ஓசை எழுப்புவதற்கு ஏற்ப நீரூற்று உயரே எழுகிறது. தகவலில், “இது தாய்லாந்தில் மலைகளுக்கு நடுவில் உள்ள ஆறு இங்கு ஓம் என்று உச்சரித்தால் நீர் மலையின் உயரத்தை விட பீறிடும் வேறு எந்த வார்த்தைக்கும் நீர் எழும்பாதாம் இது பெரிய அதிசயமாகும்… ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இதை யாரும் பகிர்ந்து வருகிறார்களா என்று பார்த்தோம். Gopalakrishnan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் இந்த வீடியோ மற்றும் பதிவை 2022 ஜூலை 11ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவில் சிறுமி ஒருவர் ஒலி பெருக்கியைப் பயன்படுத்தி “ஆஆஆ” என்று கத்துகிறார். தொடர்ந்து அவர் எழுப்பும் ஓசைக்கு ஏற்ப நீரூற்று மேலே எழுகிறது. அவர் கத்துவது ஓம் என்று இல்லை. இதன் மூலம் ஓம் என்று கூறினால் மட்டும் நீரூற்று மேலே எழுகிறது என்ற தகவல் தவறானது என்பதை புரிந்துகொள்ள முடியும். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சீனாவின் வடக்கே உள்ள மலைப் பகுதியில் நம்முடைய குரல் எழுப்புதல் அடிப்படையில் உயரே பீய்ச்சி அடிக்கும் நீரூற்று என்று ஒருவர் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தது தெரிந்தது. டிக்டாக் வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது என்பதால் உண்மையான முதலில் பதிவிடப்பட்ட பதிவை நம்மால் எடுக்க முடியவில்லை.
தொடர்ந்து தேடிய போது, சீனாவின் அரசின் China Xinhua News என்ற ஊடகம் ஒரு வீடியோவை யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. அதில் சிறுமி ஒருவர் ஆ என்று கத்த, நீரூற்று மேலே எழுகிறது. உங்களின் குரல் நீரூற்றுக்கு ஆற்றல் தருமா என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். வீடியோவில் அந்த சிறுமி நிற்கும் இடமும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள இடமும் ஒன்றாக இருப்பதைக் காண முடிந்தது.
தொடர்ந்து தேடிய போது சீனாவில் நாம் கத்தும் குரலுக்கு ஏற்ப செயல்படும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்தன. அது தொடர்பாக பல வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தாய்லாந்தைச் சார்ந்தது இல்லை. சீனாவைச் சார்ந்தது.
ஓம் என்ற ஒலிக்கு நீரூற்று மேலே எழுகிறது என்பது தவறானது. நாம் எழுப்பும் ஓசைக்கு ஏற்ப நீரூற்று உயர்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவில் இடம் பெற்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தாய்லாந்தில் ஓம் என்று முழங்கினால் ஆற்று நீர் மேலே எழுகிறது என்று பரவும் வீடியோ தவறானது, அது சீனாவில் உள்ள குரலுக்கு கட்டுப்படும் செயற்கை நீரூற்று என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தாய்லாந்தில் ஓம் என்று உச்சரித்தால் ஆற்று நீர் மேலே எழும் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Missing Context
