லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் வெடித்து எரியும் காட்சி என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive

சிவப்பு நிறத்தில் வானத்தில் வானவேடிக்கை நடந்தது போன்ற வீடியோ மற்றும் வீடுகள் தீப்பற்றி எரியும் இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், "இஸ்ரேலின் வான்வெளி விமான தாக்குதலில் மக்கள் குடியிருப்பு வீடுகளில் "ஹிஸ்புல்லா' பதுக்கி வைத்திருந்த வெடி பொருள்கள் வெடித்து வானில் தீ பிளம்பாக மாறி வெடிகள் பதுக்கிய வீடுகள் ஏரியும் காட்சி...." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


உண்மை அறிவோம்:

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆயுதங்கள், வெடி பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாகவும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவை வெடித்து தீப்பற்றி எரிந்ததாகவும் சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.


நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்த்து பதிவிட்டுள்ளனர். முதல் வீடியோ பார்க்க வானவேடிக்கை போலத் தெரிகிறது. இரண்டாவது வீடியோ பயங்கர தீவிபத்து போலத் தெரிகிறது. எனவே, இரண்டையும் தனித்தனியாகப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ லெபனானில் எடுக்கப்பட்டது இல்லை என்று பலரும் பதிவிட்டிருந்தனர்.


உண்மைப் பதிவைக் காண: Youtube

தொடர்ந்து தேடிய போது, யூடியூபில் வெளியான வீடியோ ஒன்று கிடைத்தது. அது 2024 ஆகஸ்ட் 9ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட லெபனான் மீதான தாக்குதலுக்கு ஒன்று முதல் ஓன்றரை மாதங்களுக்கு முன்பு அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அரபி மொழியிலிருந்த பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தோம்.

அல்ஜீரிய ஆதரவாளர்கள் 103வது ஆண்டு விழாவைக் கொண்டாடினார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபற்றி விவரம் அறிய அதை அப்படியே காப்பி செய்து கூகுளில் பதிவேற்றி தேடினோம். அப்போது, "அல்ஜீரிய கால்பந்து கிளப் ஆன, மௌலூடியா கிளப் ஆஃப் அல்ஜியர்ஸின் ஆதரவாளர்கள் தங்கள் கிளப்பின் 103வது ஆண்டு விழாவை ஆகஸ்ட் 7, 2024 அன்று பட்டாசு வெடித்து கொண்டாடினர்" என்று செய்திகள் கிடைத்தது. இதன் மூலம் இந்த வீடியோ லெபானானில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.


இரண்டாவது வீடியோவில் இடம் பெற்ற காட்சியின் புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் உள்ள தகவலை மொழிபெயர்த்துப் பார்த்தோம். ‘இந்தோனேஷியாவில் குடிம் என்ற பகுதியில் சங்குலிராங் மார்க்கெட் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்து சாம்பல்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ ஆகஸ்ட் 22, 2024 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.


உண்மைப் பதிவைக் காண: Youtube

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் 2024 செப்டம்பரில் தொடங்கியது. ஆனால் இந்த வீடியோக்களோ 2024 ஆகஸ்டில் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளின் வீடியோவை ஒன்று சேர்த்து லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் என்று தவறான தகவலை சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.


இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்கள் வெடித்து சிதறும் காட்சி என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram
Claim Review :   லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் வெடித்து எரியும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE