பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஒரு நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாமில் இந்திய ராணுவம் தாக்குதல்..…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத் தரப்பில் வீடியோ வெளியிடப்பட்டதாக எந்த செய்தியும் இல்லாத நிலையில், இந்த பதிவு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோவில் ஒரு நகரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ஆனால், இந்தியா தரப்பில் எல்லைப் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது. பாலஸ்தீனம், இஸ்ரேல் வீடியோவாக இது இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆய்வைத் தொடங்கினோம்.

Archive

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நம்முடைய சந்தேகம் உண்மையானது. இந்த தாக்குதல் இஸ்ரேல் மீது 2024ம் ஆண்டு ஈரான் நடத்திய தாக்குதலின் வீடியோ என்பது தெரியவந்தது.

நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்களும் இந்த வீடியோவை 2024 அக்டோபர் 2ம் தேதி தங்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டு இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் என்று குறிப்பிட்டிருந்தனர். ஊடகங்கள் மட்டுமின்றி நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை அக்டோபர் 2, 2024 அன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா 2025 மே மாதம் தாக்குதல் நடத்தியது. மே மாதம் 6ம் தேதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது 7ம் தேதி காலையில் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் கண்விழித்துத் தாக்குதல் விவரங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார் என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டது போன்று பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலின் காட்சி என்று பரவும் வீடியோ தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் காட்சியை எடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply