
பாஜக-வுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்துவிட்டு தமிழகத்திற்கு வேலை தேடி புறப்பட்ட பீகாரிகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ரயிலில் படிக்கட்டுகள், ஜன்னல்கள் என கிடைத்த எல்லா இடங்களிலும் மக்கள் தொங்கிக்கொண்டு பயணிக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகார் ல கபோதிகளை ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டு இப்போ வையித்து பொழப்புக்கு தமிழ் நாட்டுக்கு புறப்பட்டு வரோம்ங்க……” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் இந்த கூட்டணி வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில், தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த பீகார் மக்கள், வேலை வாய்ப்பைத் தேடி தமிழ்நாட்டுக்கு ரயிலில் புறப்பட்டதாக என்று ஒரு புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல முறை சமூக ஊடகங்களில் பார்த்த புகைப்படம் போல் இருந்ததால் இது பற்றி ஆய்வு செய்தோம்.
புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித்தேடினோம். அப்போது பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஒரு செய்திப் பதிவில் reuters என்ற செய்தி நிறுவனம் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: reuters.com I Archive
அப்போது reuters இணையதளத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அதில், இந்த புகைப்படம் பீகார் தலைநகர் பட்னாவில் 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த புகைப்படத்தை Krishna Murari Kishan என்பவர் எடுத்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர். தேர்தல் முடிந்து இவர்கள் தமிழ்நாட்டுக்கு அல்லது நாட்டின் வேறு பகுதிக்கு சென்றார்கள் என்றெல்லாம் அதில் குறிப்பிடப்படவில்லை.
இதன் மூலம் 2010ம் ஆண்டு பழைய புகைப்படத்தை எடுத்து, 2025 பீகார் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் பீகார் மக்கள் வேலை தேடி தமிழகம் புறப்பட்டனர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை 2025 நவம்பாில் பாஜக-வை வெற்றிபெற வைத்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வேலை தேடி புறப்பட்ட பீகாரிகள் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:பாஜக-வுக்கு வாக்களித்துவிட்டு தமிழகம் புறப்பட்ட பீகாரிகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Misleading


