
துருக்கியில் இருந்து மெக்கா, மதினா வழியாக எகிப்து தலைநகர் கெய்ரோ வரை சென்ற ரயில் என்று ஒரு பழைய பாழடைந்த ரயில் இன்ஜின் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பழைய கைவிடப்பட்ட ரயில் இன்ஜின்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரு காலத்தில்… துருக்கியே நாட்டிலிருந்து புறப்பட்டு, சிரியா ஜோர்டான் மெக்கா மெதினா ஜெரூசலம் சினாய் வழியாக ஈஜிப்ட் தலைநகர் கெய்ரோ வரை ஓடிய தொடரி.
During the Ottoman Caliphate, this train used to travel through Turkey, Syria, Jordan, the Hejaz Kingdom, Mecca, Medina, Jerusalem, and Sinai to reach Cairo in Egypt” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
துருக்கியின் ஒட்டோமான் பேரரசு காலத்தில் துருக்கியிலிருந்து எகிப்து வரை இயக்கப்பட்ட ரயில் என்று ஒரு புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று தெரிந்துகொள்ள ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது இது பொலிவியா நாட்டில் உள்ள ரயில் கல்லறையில் (Train Graveyard in Uyuni) உள்ள கைவிடப்பட்ட ரயில் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்திலிருந்த பழைய ரயில் இன்ஜினும், பொலிவியா நாட்டில் உள்ள ரயில் இன்ஜின் புகைப்படமும் ஒன்றாக இருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் பொலிவியா நாட்டில் உள்ள ரயில் கல்லறையில் உள்ள ஒரு ரயில் இன்ஜின் புகைப்படத்தை எடுத்து, ஒட்டோமான் அரசு காலத்தில் இயக்கப்பட்ட பழைய ரயில் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியானது.
உண்மைப் பதிவைக் காண: trenopedia.com I Archive
அடுத்ததாக ஒட்டோமான் காலத்தில் துருக்கியிலிருந்து மெக்கா, மதினா வழியாக கெய்ரோவுக்கு ரயில் இயக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். இது தொடர்பாக தேடிய போது ஒட்டோமான் காலத்தில் மதினாவுக்கு ரயில் இயக்கப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் அந்த ரயில் துருக்கியில் தொடங்கி கெய்ரோ வரை செல்லவில்லை என்பதும் தெரியவந்தது. இன்றைய சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் தொடங்கி மதினா வரை மட்டும் இயக்கப்பட்டதாகவும் தகவல் நமக்குக் கிடைத்தது.
ஒட்டோமான் அரசுக்கு எதிராக ஏற்பட்ட அரபு கிளர்ச்சி காரணமாக முதல் உலகப்போருக்குப் பிறகு இந்த ரயில் போக்குவரத்து கைவிடப்பட்டதாகவும், அதன் பிறகு ரயில்கள், ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள் கைவிடப்பட்டு, பராமரிப்பு இன்றி இருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. சில ரயில் நிலையங்கள் ரயில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த ரயிலை துருக்கி தலைநகர் இஸ்தான்புல் வரை இயக்க திட்டமிடப்பட்டது என்றும் ஆனால் அதற்கு முன்பாகவே ரயில் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் செய்திகள் கிடைத்தன.
உண்மைப் பதிவைக் காண: alamy.com I Archive I dailysabah.com I Archive I gulfif.org I Archive
ஒட்டோமான் ஆட்சிக் காலத்தில் சிரியாவில் இருந்து மதினாவுக்கு ரயில் இயக்கப்பட்டதை, துருக்கியிலிருந்து எகிப்து வரை ரயில் இயக்கப்பட்டதாகத் தவறாகப் பகிர்ந்திருப்பதும், மதினா வரை இயக்கப்பட்ட பழைய ரயில் இன்ஜினுக்கு பதில் பொலிவியா நாட்டில் உள்ள கைவிடப்பட்ட பழங்கால ரயில் இன்ஜின் படத்தை எடுத்து தவறாக பகிர்ந்திருப்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பொலிவியா நாட்டில் உள்ள கைவிடப்பட்ட ரயில் இன்ஜின் ஒன்றின் புகைப்படத்தை எடுத்து அந்தக் காலத்தில் துருக்கியில் இருந்து கெய்ரோ வரை சென்ற ரயில் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:துருக்கியில் இருந்து எகிப்துக்கு சென்ற அந்த காலத்து ரயில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
