
சென்னையில் சிறுமியைக் கடத்திய வட மாநில தொழிலாளி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சென்னை வட மாநில தொழிலாளி விழித்திரு தமிழா. நாளைக்கு உன் பிள்ளைக்கும் நடக்கும்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2025 ஜூலை மாதம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது பள்ளி செல்லும் சிறுமியை இளைஞர் ஒருவர் தூக்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதே அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இப்போது, அதே போன்று ஒரு சம்பவம் நடந்தது போன்று வீடியோ ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
சென்னையில் இந்த சம்பவம் நடந்தது போன்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சமீபத்தில் எந்த ஒரு செய்தியும் இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கடந்த ஜூன் 2025ல் இந்த வீடியோவை ஒருவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் கன்னட செய்தி ஊடகம் ஒன்றின் லோகோவும் இருந்தது.
அந்த கன்னட ஊடகத்தின் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். இந்த வீடியோ செய்தியை ஜூன் 25, 2025 அன்று அவர்கள் வெளியிட்டிருந்தனர். ஆனால் அந்த பதிவில் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று எதையும் குறிப்பிடவில்லை. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பற்றி எப்போதும் விழிப்புணர்வுடன் எச்சாிக்கையுடன் இருங்கள் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடிய போது தமிழ்நாடு ஃபேக்ட் செக் வெளியிட்ட பதிவு நமக்குக் கிடைத்தது. அதிலும் கூட இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று குறிப்பிடவில்லை. கடந்த மார்ச் மாதம் முதலே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் இந்த சம்பவம் நடக்கவில்லை என்று தமிழ்நாடு காவல் துறை உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
தமிழ்நாடு காவல் துறை இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை என்று உறுதி செய்திருப்பதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடியது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சென்னையில் சிறுமியை கடத்திச் சென்ற வட இந்திய தொழிலாளி என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டைச் சார்ந்தது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:சென்னையில் சிறுமியைக் கடத்திய வட மாநில தொழிலாளி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
