
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்று சில புகைப்படங்களைச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
விமானத்திற்குள் சிறியவர்கள், பெரியவர்கள் அதிர்ச்சியில் அலறுவது போன்ற புகைப்படங்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “அகமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சில புகைப்படங்களை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். விமானம் புறப்பட்டு ஒரு நிமிடத்திற்குள்ளாகவே விபத்துக்குள்ளாகிவிட்டது. அப்படி இருக்க எப்படி புகைப்படம், வீடியோ எடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. மேலும், விமானத்திற்குள்ளே குழந்தைகள் எல்லாம் ஒரே சீட்டில் அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் உள்ளது. இவை எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்தவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில் விமானம் எவ்வளவு நேரம் பறந்தது என்பதை உறுதி செய்ய இது தொடர்பாக வெளியான செய்திகளைப் பார்த்தோம். ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் 1.38க்கு ரன்வேயில் இருந்து புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில விநாடிகளிலேயே விமானத்தின் விமானி, “No thrust, not taking lift” என்று மே டே எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். 1.39 நிமிடத்தில் விமானம் தரையில் விழுந்து வெடித்துள்ளதாக செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளது. ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே விமானம் பறந்துள்ளது. அப்படி இருக்க அதற்குள்ளாக புகைப்படம் எடுத்து எப்படி வெளியிட்டிருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்திற்குள் எப்படி இருக்கும் என்று பழைய வீடியோ, புகைப்படங்களை தேடிப் பார்த்தோம். அதில் பிசினஸ் வகுப்பில் இரண்டு இரண்டு இருக்கைகள் சேர்ந்து இருந்தன. எக்கானமி வகுப்பில் மூன்று மூன்றாக இருக்கைகள் இருந்தன. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ஒரே ஒரு சீட் தான் உள்ளது. ஏர் இந்தியா விமானத்தின் இருக்கை நிறமும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் உள்ள இருக்கையின் நிறமும் உள் வடிவமைப்பும் வித்தியாசமாக இருப்பதை காண முடிகிறது.
விமானம் டேக் ஆஃப் ஆகும் போது பயணிகள் அனைவரும் அமர்ந்து, சீட் பெல்ட் போட்டிருப்பார்கள். அந்த நேரத்தில் யாரும் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், ஒற்றை இருக்கையில் இரண்டு குழந்தைகள் அமர்ந்து உள்ளனர். அருகில் இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள் நின்று கொண்டிருந்தனர். விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அறிவித்த விநாடியிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குள்ளாக எழுந்து நின்று புகைப்படம், வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட நேரம் இருந்திருக்காது.
இப்படி ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவை அரசு, விமான நிறுவனம் மற்றும் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினர் வெளியிட்டதாக எந்த செய்தியும் இல்லை. பார்க்க செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படம் போல் உள்ளது. எனவே, இந்த புகைப்படத்தை ஏஐ புகைப்படங்களைக் கண்டறியும் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அதுவும் இது முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்று உறுதி செய்தது.
தொடர்ந்து தேடிய போது வீடியோவாகவே சிலர் பதிவிட்டிருந்தனர். அவற்றை உற்றுக் கவனித்த போது இது ஏஐ வீடியோதான் என்பது உறுதியானது. வீடியோவில் குழந்தைகளுக்கு பின்புறத்தில் ஒரு ஜோடி கட்டி அணைப்பது போன்று காட்சி வருகிறது. பெண்ணை பிடித்து இழுத்துக் கட்டியணைக்கும் போது அந்த பெண்ணின் தலை திடீரென்று மறைந்து, ஆணின் தலை மட்டுமே தெரிகிறது. ஏஐ மூலம் வீடியோ உருவாக்கும் போது இது போன்று குறைபாடுகள் எழுவது வழக்கமானதுதான். இவை எல்லாம் இந்த புகைப்படம் போலியானது என்பதை உறுதி செய்கின்றன.
உண்மைப் பதிவைக் காண: dailymail.co.uk I Archive
அடுத்ததாக பெரியவர் ஒருவர் திரும்பி பார்க்கும் புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படத்துடன் 2024ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி வெளியான இங்கிலாந்தின் டெய்லி மெயில் ஊடகத்தின் செய்தி கிடைத்தது. அதில், “கஜகஸ்தான் நாட்டில் விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளான நிகழ்வில், விபத்து ஏற்படுவதற்கு முன்பு பயணிகள் பிரார்த்தனை செய்த காட்சி வைரலாக பகிரப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தகவல் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம். அப்போது எக்ஸ் தளத்தில் பயணி ஒருவர் எடுத்த கடைசி நேர வீடியோ வெளியாகி இருந்தது நமக்குக் கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள காட்சியும் இருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் அகமதாபாத் விமான விபத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது இல்லை என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பழைய விமான விபத்து மற்றும் ஏஐ புகைப்படங்களை ஒன்று சேர்த்து அகமதாபாத் விமான விபத்திற்கு முன்பு கடைசி நிமிட காட்சிகள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசி நிமிடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
