
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் மருத்துவ சிகிச்சை அளித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சாலை ஓரமாக ஏழை மக்களுக்கு சீக்கியர்கள் சிகிச்சை அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “போற்றுதலுக்குரிய புகைப்படம். ஆயிரக்கணக்கான தூரங்கள் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் செய்யும் அவசிய சேவை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சீக்கியர்கள் சிகிச்சை அளிப்பது உண்மையில் போற்றுதற்குரிய பணிதான். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்பவர்களுக்கு சிகிச்சை அளித்தபோது எடுத்த படமா என்று மட்டுமே நாம் ஆய்வு மேற்கொண்டோம்.
கடைகள் மூடப்பட்டு இருப்பதால், ஊரடங்கு காலம் போல தெரிகிறது. ஆனால், சிகிச்சை அளிக்கும் யாரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. மேலும், சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கவும் இல்லை. சாலையில் பலரும் நடந்து வருவது தெரிகிறது. இதனால், இது கொரோனாவுக்கு முந்தைய படமாக இருக்கலாம் என்று தெரிந்தது. இதை உறுதி செய்ய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
நம்முடைய தேடலில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. 2017 நவம்பர் 2ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு ட்வீட் பதிவில், “ஒவ்வொரு நாள் காலையிலும் டெல்லி சிஸ்கன்ஜ் குருத்வாரா முன்பாக தன்னார்வலர்கள் அமர்ந்து, ஏழைகளின் காயங்களை சுத்தம் செய்து பேன்டேஜ் போடுகின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தது. 2017ம் ஆண்டு இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், சிகிச்சை பெறுபவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்பது உறுதியானது.

இது போன்று வேறு ஒருவர் வெளியிட்ட ட்வீட் அடிப்படையில் டைம்ஸ் நவ் நியூஸ் வெளியிட்ட செய்தி கிடைத்தது. 2017 டிசம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்ட அந்த செய்தியில், “டெல்லியில் சீக்கிய டாக்டர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் தேவைப்படுபவர்கள், ஏழைகளுக்கு தினமும் காலையில் இலவச சிகிச்சை அளிக்கின்றனர்” என்று செய்தி வெளியிட்டிருந்தனர்.
கொரோனா வைரஸ் 2020 ஜனவரி முதல் வாரத்தில்தான் சீனாவில் பரவ ஆரம்பித்தது. இந்தியாவில் மார்ச் மாத தொடங்கத்தில் கொரோனா தொற்று வேகம் எடுத்தது. முழு ஊரடங்கு என்பது 2020 மார்ச் 24ம் தேதி அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தை “ஆயிரக் கணக்கான கி.மீ தூரம் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் சிகிச்சை அளிப்பதாக” தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளித்த சீக்கியர்கள்: புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
