கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் அருகே பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம்  சென்ற காரில் 500 ரூபாய் நோட்டுக்களாக 2 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

உண்மை அறிவோம்:

பாஜக நிர்வாகி காரில் இருந்து ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டதாக சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால், ஊடகங்களில் அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. உண்மையில் பாஜக நிர்வாகி காரில் இருந்து ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டிருந்தால் தி.மு.க ஆதரவு மற்றும் தி.மு.க-வினர் நடத்தும் ஊடகங்களிலாவது செய்தி வந்திருக்கும். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. 

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போது ஜூனியர் விகடன் வெளியிட்டது போலவே உள்ளது. எனவே, இதை ஜூனியர் விகடன் வெளியிட்டதா என்ற அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். ஆனால், அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு இல்லை. 

அதேசமயம், “அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் அருகே அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்ற காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்” என்ற நியூஸ் கார்டு நமக்குக் கிடைத்தது.

“அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் அருகே” என்ற வார்த்தையை எடுத்து ஜூனியர் விகடன் பெயரிலேயே போலியாக நியூஸ் கார்டை வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதை உறுதிசெய்துகொள்ள விகடன் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை அனுப்பிவைத்தோம். அவரும், “இது 100 சதவிகிதம் போலியான நியூஸ் கார்டு. இதை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார்.

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டோம். ‘’அவரும் இது போலியானது. கேசவ விநாயகம் காரில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை,’’ என்றார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பாஜக நிர்வாகி காரில் இருந்து ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடி சிக்கியது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டதா?

Written By: Chendur Pandian 

Result: False