
‘’காயல்பட்டணம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டிய கனிமொழி பிறகு கம்பி நீட்டிவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.
இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இதர சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என்று நம்பி வைரலாக ஷேர் செய்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
அதாவது, ‘’தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் பகுதியில் திமுக எம்.பி., கனிமொழி, தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்து, அதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தருவதாக 2010ம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார். 10 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அங்கே கட்டிடம் கட்டவில்லை,’’ என்று மேற்கண்ட பதிவுகள் மூலமாக நமக்கு தெரியவருகிறது.
ஆனால், முழு உண்மை என்னவெனில், ஒரு திட்டம் ஆரம்பித்தபோது, பகிரப்பட்ட புகைப்படம், அது நடந்து முடிந்த பிறகும், அப்படியே பகிரப்பட்டால், சமூகத்தில் என்ன குழப்பம் ஏற்படும் என்பதற்கு மேலே உள்ள புகைப்பட தகவல் சரியான சான்றாகும்.
ஆம், 2019ம் ஆண்டில்தான், குறிப்பிட்ட இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு, கனிமொழி அடிக்கல் நாட்டினார். அந்த வித்தியாசம் கூட தெரியாமல், 2010 என்று குறிப்பிடுகிறார்கள். இதைவிடக் கொடுமை, அந்த இடத்தில் கட்டுமானப் பணி முடிந்து, அது பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது. இதுவும் தெரியாமல், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என எங்கு பார்த்தாலும் இப்படி தகவல் பகிர்ந்து வருகிறார்கள்.
குறிப்பிட்ட அடிக்கல்லின் தெளிவான புகைப்படத்தை கீழே இணைத்துள்ளோம்.

2019ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதியன்று இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்துள்ளது. இதுபற்றி அப்போது ஊடகங்களில் வெளியான செய்தியையும் கீழே இணைத்துள்ளோம்.
இதற்கடுத்தப்படியாக, அவர் குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை, 2020ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதற்கான ஊடகச் செய்தியும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, குறிப்பிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, அதனை பயன்பாட்டிற்காக, திறந்து வைக்கும் நிகழ்வையும் கனிமொழி நடத்தியுள்ளார். அதற்கான விழா, 2021ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதியன்று நடைபெற்றுள்ளது.

எனவே, 2019ல் அடிக்கல் நாட்டி, 2021ம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்ட ஒரு கட்டுமானப் பணியை, 2010ம் ஆண்டில் இருந்து இன்னமும் முடியவில்லை என்று கூறி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அடிக்கல் நாட்டியதும் கம்பி நீட்டினாரா கனிமொழி?- முழு உண்மை இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False
