
கும்பமேளா ஊர்வலத்தின் உண்மைகள் பற்றி பேசிய பெண் பத்திரிகையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டதாக ஒரு தகவல், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பெண் ஒருவர் சாலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனுடன் வீடியோ ஒன்றும் உள்ளது. பிரக்யா லைவ் என்று அதில் ட்விட்டர் ஐடி இருந்தது. கும்பமேளா காட்சிகள் வருகிறது. கும்பமேளாவில் லட்சக் கணக்காணோர் ஒன்று சேர அனுமதி கொடுத்தது பற்றி இந்தியில் பேசுகிறார். நிலைத் தகவலில், “கும்பமேளா ஊர்வலத்தின் உண்மையை சொன்னதால்,
நடுரோட்டில் வைத்து குத்திக்கொன்ற கொடுமை நம்புங்க ஜனநாயக நாடு பெண்களுக்கு பாதுகாப்பான நாடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை உத்தமன் உத்தமன் என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 ஏப்ரல் 18 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கும்பமேளாவை விமர்சித்த அந்த பெண்ணை கொலை செய்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். சாலையில் இறந்து கிடக்கும் பெண்ணின் படம் டெல்லியில் லவ் ஜிகாத் காரணமாக பெண் கொல்லப்பட்டார் என்று முன்பு ஒரு வதந்தி பரவியது. விசாரணையில் கணவனே தன் மனைவியைக் கொலை செய்தது தெரிந்தது. அது தொடர்பாக நாம் உண்மை கண்டறியும் ஆய்வு கூட நடந்தியிருந்தோம். அந்த பெண்ணின் படம் போலவே இந்த பதிவில் உள்ள பெண்ணின் படம் இருப்பதால் இந்த பதிவை ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: worldofbuzz.com I Archive
டெல்லியில் கணவனால் பட்டப்பகலில் சாலையில் குத்திக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் படங்களை மீண்டும் தேடினோம். அந்த பெண்ணின் படத்தைத்தான் கும்பமேளா பற்றி பேசியதால் கொலை செய்யப்பட்ட பெண் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியானது.
அடுத்ததாக, இந்த வீடியோவில் உள்ள பெண்மணி யார் என்று பார்த்தோம். வீடியோவிலேயே ட்விட்டர் ஐடி உள்ளதால் அதன் அடிப்படையில் தேடினோம். அப்போது, அவருடைய வாட்ஸ் அப் நம்பருக்கு அவரை பட்டப்பகலில் கொலை செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு வந்த புகைப்படங்கள், தகவலின் ஸ்கிரீன் ஷாட்டை வைத்து பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்தியில் இருந்ததை மொழி மாற்றம் செய்து பார்த்தோம். அதில், “நான் உயிருடன் உள்ளேன். மிகவும் பாதுகாப்பாக என் வீட்டில் உள்ளேன். கொரோனா வழிகாட்டுதல் படி வீட்டில் உள்ளேன். நான் கொலை செய்யப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை ஏப்ரல் 18, 2021 அன்று அவர் பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் கும்பமேளா பற்றிய உண்மைகளை பேசிய பெண் பத்திரிகையாளர் சாலையில் குத்திக்கொலைசெய்யப்பட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
டெல்லியில் பெண் ஒருவர் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்ட படத்தை வைத்து கும்பமேளா பற்றி பேசிய பெண் ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டதாக தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கும்பமேளா பற்றி உண்மை பேசிய பெண் பத்திரிகையாளர் குத்திக் கொலையா?
Fact Check By: Chendur PandianResult: False
