
குஜராத்தில் சமீபத்தில் ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத் தொட்டியில் முதன் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக பலரும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தண்ணீர் தொட்டி நொறுங்கி விழுந்தது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருச்சி ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத் தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் சூரத்தில் சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி சோதனை செய்த போது அந்த தொட்டி உடைந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான செய்தி, வீடியோ செய்தி, சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் திருச்சியில் நடந்தது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதுவும் தி.மு.க ஆதரவு தினகரன் நாளிதழே இந்த செய்தியை வெளியிட்டது போன்று பரப்பி வருகின்றனர். இந்த செய்தியை தினகரன் வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம்.
தினகரன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ பதிவுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். 2026 ஜனவரி 21ம் தேதி இந்த வீடியோவை அந்த ஊடகம் வெளியிட்டிருந்தது. அதில், “குஜராத்: ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத் தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் குஜராத் என்ற வார்த்தையை மட்டும் எடிட் செய்து மாற்றி, திருச்சி என்று சேர்த்து தவறாக வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
குஜராத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:திருச்சியில் புதிதாகக் கட்டிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்ததா?
Fact Check By: Chendur PandianResult: False


