விமான விபத்தைப் பார்வையிட வந்த மோடி விதவிதமான உடைகளை அணிந்தாரா?

False அரசியல் சார்ந்தவை | Political தேசிய அளவில் I National

அகமதாபாத் விமான விபத்தைப் பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு உடை அணிந்திருந்தார் என்று ஒரு புகைப்படத் தொகுப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அகமதாபாத் விமான விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மோடி சென்ற புகைப்படம், விமான விபத்தில் தப்பியவரை நலம் விசாரித்த புகைப்படத்துடன் வேறு சில புகைப்படங்களைச் சேர்த்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “one tragedy – four dresses for modi” அதாவது ஒரு விபத்து நான்கு உடைகளில் மோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்பட பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று பார்வையிட்டார். மேலும் விபத்தில் உயிர் பிழைத்து சிகிச்சை பெற்றுவரும் ஒரே ஒரு நபரையும் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களையும் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில் வேறு சில புகைப்படங்களையும் சேர்த்து விபத்தைப் பார்வையிட வந்த மோடி விதவிதமான ஆடையை மாற்றி போஸ் கொடுத்தார் என்பது போன்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். விமானத்தின் எஞ்சிய பகுதிகளைப் பார்வையிடும் மற்றும் சிகிச்சை பெற்று வருபவரைச் சந்தித்த புகைப்படத்தில் பார்க்க ஒரே ஆடைதான் அணிந்துள்ளார். 

இருப்பினும் அதை உறுதி செய்துகொள்ள மோடியின் அகமதாபாத் பயணம் தொடர்பான வீடியோக்களை பார்வையிட்டோம். இந்தியா டுடே வெளியிட்டிருந்த வீடியோவில் பிரதமர் மோடி விபத்து நடந்த இடம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்த வீடியோ என இரண்டையும் ஒன்றாக வெளியிட்டிருந்தனர். அதில் அவர் உடையை மாற்றவில்லை என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: theprint.in I Archive

அடுத்ததாக ஒரு இரும்பு பாலத்தின் மீது நிற்கும் புகைப்படத்தை ஆய்வு செய்தோம். அதை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது குஜராத்தில் 2022ம் ஆண்டு மோர்பி இரும்பு பாலம் இடிந்த விழுந்த போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக அப்போது வெளியான ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive

அடுத்ததாக வரைபடத்தை வைத்து ஆய்வு செய்யும் புகைப்படத்தை ஆய்வு செய்தோம். பிரதமர் நரேந்திர மோடி அருகே ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளார். எனவே, இது பழைய புகைப்படம் என்பது தெளிவாகிறது. படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது, அது 2023ம் ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட மோசமான ரயில் விபத்தின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த புகைப்படமும் அகமதாபாத் சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

பிரதமர் நரேந்திர மோடியின் வெவ்வேறு புகைப்படங்களை எடுத்து, அகமதாபாத் விமான விபத்தை ஆய்வு செய்ய சென்ற போத விதவிதமான ஆடையை அணிந்திருந்தார் என்று தவறான தகவலை பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மோர்பி பால விபத்து, ஒடிசா ரயில் விபத்து போன்ற நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்த புகைப்படங்களை எல்லாம் சேர்த்து அகமதாபாத் விமான விபத்தை பார்வையிட வந்த இடத்தில் விதவிதமான ஆடைகளை அணிந்திருந்தார் என்று தவறான தகவலை சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:விமான விபத்தைப் பார்வையிட வந்த மோடி விதவிதமான உடைகளை அணிந்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply