
சேலம் தி.மு.க எம்.பி அக்கட்சியில் இருந்து விலகினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
எக்ஸ் தளத்தில் யாரோ வெளியிட்டிருந்த விலகல் அறிவிப்பு ஒன்றுடன் கூடிய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “சேலம் MP திமுகவில் இருந்து விலகல்.. பேரனுக்கு பேனர் வைக்கவும் போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை இதற்கு நாங்கள் தயாராக இல்லை..!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவல், “சேலம் MP திமுகவில் இருந்து விலகல் ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்ட வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சேலம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக இருப்பவர் தி.மு.க-வைச் சார்ந்தவர் செல்வகணபதி. அவர் தி.மு.க-வில் இருந்து விலகியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. அப்படி இருக்க, சேலம் எம்.பி தி.மு.க-வில் இருந்து விலகினார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே அது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவிலிருந்த “விலகல் அறிவிப்பில்” சேலம் MP எழிலரசன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி யாராவது உள்ளார்களா, தி.மு.க-வில் இருந்து விலகியுள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம்.
எக்ஸ் தளத்தில் சேலம் MP எழிலரசன் என்று டைப் செய்து தேடிப் பார்த்தோம். அப்போது, சேலம் MP எழிலரசன் என்ற பெயரில் ஒரு எக்ஸ் தள கணக்கு நமக்குக் கிடைத்தது. அதில், விலகல் அறிவிப்பும் இருந்தது. ஃபேஸ்புக்கில் தேடிப் பார்த்த போது, எழிலரசன் என்ற பெயரில் பல ஐடி-க்கள் இந்தன. அவற்றுக்கு நடுவே, “மா.பா. எழில் அரசன்” என்று ஒரு ஃபேஸ்புக் முகவரி கிடைத்தது. அதில், அந்த விலகல் அறிவிப்பும் இருந்தது. இவர் தன்னுடைய இனிஷியலான மா.பா என்பதை ஆங்கிலத்தில் MP என்று குறிப்பிட்டுள்ளார். இதை நாடாளுமன்ற உறுப்பினர் என்று நினைத்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.
தி.மு.க-வில் இருந்து விலகியது சேலம் தி.மு.க எம்.பி அல்ல… எம்.பி.எழில்அரசன் என்பவர் விலகியதை, நாடாளுமன்ற உறுப்பினர் விலகினார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் சேலம் தி.மு.க எம்.பி, தி.மு.க-வில் இருந்து விலகினார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சேலத்தில் தி.மு.க நிர்வாகியாக இருந்த MP என்ற இனிஷியல் கொண்ட எழிலரசன் என்பவர் அக்கட்சியில் இருந்து விலகியதை, நாடாளுமன்ற உறுப்பினர் திமுக-வில் இருந்து விலகினார் என்று தவறாக வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
