பிரபல நடிகை சன்னி லியோன் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதாகவும் அதில் ஒரு குழந்தை தமிழகத்தைச் சேர்ந்த குழந்தை என்றும் சமூக ஊடகங்களில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகை சன்னி லியோன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இந்தியாவை பூர்விகமாக கொண்டு கனடா நாட்டில் வளர்ந்த சன்னி லியோன் பலான படத்தில் நடித்து பாலிவுட்டில் கலக்கி புகழ் பெற்ற இவர், 3 அனாதை குழந்தைகளை தன் கணவருடன் சேர்ந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதில் ஒரு குழந்தை தமிழகத்தை சேர்ந்த பெண் குழந்தை.

இவர் சினிமாவால் புகழ் பெற்றிருந்தாலும், மக்கள் மனதில் நிற்பதற்கு இந்த செயல் தான் காரணம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Thuli Tube துளி டியூப் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜூன் 18ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகை சன்னி லியோன் தமிழகத்தைச் சேர்ந்த பெண் குழந்தை உள்பட மொத்தம் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வாடகைத் தாய் முறையில் அவர் குழந்தை பெற்றதாக சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வெளியான நிலையில் தத்தெடுத்து வளர்க்கிறார் என்ற தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த பதிவில் உள்ள தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் சன்னி லியோன் குழந்தைகள் மூன்றும் தத்தெடுக்கப்பட்டதா இல்லையா என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். சன்னி லியோன், குழந்தைகள், வாடகைத் தாய் என சில கீ வார்த்தைகளை கூகுள் தேடலில் ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, சன்னி லியோனுக்கு சரகோசி எனப்படும் வாடகைத் தாய் முறையில் ஆஷர், நோவா என்கிற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததாக செய்திகள் கிடைத்தன. சரகோசி முறையில் குழந்தைகளைப் பெற்றெடுத்ததில் தான் சந்தித்த சோதனைகள் பற்றி சன்னி லியோன் அளித்த பேட்டிகள் பல நமக்குக் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive 1 I freepressjournal.in I Archive 2 I lokmattimes.com I Archive 3

வாடகைத் தாய் முறையில் குழந்தையைப் பெற்றுக்கொள்வது மிகக் கடுமையான செயல்முறையாக இருந்தது. இதனால், குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் என்ன என்று யோசித்து குழந்தையைத் தத்தெடுத்தோம். குழந்தை நம்முடைய மரபணு கொண்டதாக இல்லாவிட்டால் என்ன, அதை நம்முடைய இதயத்தால் இணைப்போம் என்று நாங்கள் குழந்தையைத் தத்தெடுப்பதற்கான செயல்முறைகளில் இறங்கினோம். ஒரே வாரத்தில் பெண் குழந்தை மற்றும் சரகோசி முறையில் இரண்டு ஆண் குழந்தைகள் எங்களுக்கு கிடைத்தனர்" என்று அவர் கூறியதாக செய்திகள் கிடைத்தன.

2017ல் நிஷா என்ற பெண்ணை அவர் தத்தெடுத்ததாகவும், 2018ம் ஆண்டு சரகோசி முறையில் தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாகச் சன்னி லியோன் அறிவித்ததாக, செய்திகள் கூறுகின்றன. இதன் மூலம் மூன்று குழந்தைகளும் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்ற தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக பெண் குழந்தையை தமிழ்நாட்டில் இருந்து தத்தெடுத்து வளர்க்கிறாரா சன்னி லியோன் என்று தேடிப் பார்த்தோம். அப்போது, அந்த பெண் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லத்தூர் என்ற ஊரில் இருந்து தத்தெடுத்ததாக செய்திகள் கிடைத்தன. பொதுவாக தத்தெடுக்கும் பெற்றோருக்கு குழந்தையின் புகைப்படம், நிறம், மருத்துவ பின்னணி உள்ளிட்டவை பகிரப்படும். ஆனால் இவை எதையும் சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் பொருட்படுத்தவில்லை. 2017ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி தத்து கொடுக்க தயாராக உள்ள குழந்தை பற்றிய விவரத்தை சன்னி லியோனுக்கு தெரிவித்துள்ளனர். அதை ஏற்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு 48 மணி நேர அவகாசமும் அளிக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே தத்தெடுக்க அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்" என்று செய்தி கிடைத்தது.

தத்தெடுத்தது தொடர்பாக சன்னி லியோன் வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவும் நமக்குக் கிடைத்தன.

நம்முடைய ஆய்வில் சன்னி லியோனுக்கு வாடகைத் தாய் முறையில் இரண்டு குழந்தைகள் பிறந்தன என்பதும், ஒரு குழந்தை மகாராஷ்டிராவில் தத்தெடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சன்னி லியோன் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார் என்ற தகவல் தவறானது என்பதும், அதில் ஒரு குழந்தை தமிழகத்தைச் சார்ந்த குழந்தை என்ற தகவலும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நடிகை சன்னி லியோன் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் என்றும் அதில் ஒரு குழந்தை தமிழகத்தைச் சார்ந்த குழந்தை என்றும் பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழ்நாட்டு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறாரா சன்னி லியோன்?

Written By: Chendur Pandian

Result: False