பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் வசித்த வீடு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஒரு பழைய வீட்டின் வீடியோ ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 26ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "P.M.மோடிஜி அவர்களின் தாயார் வசித்த வீடு. நம்ம தமிழ் நாட்டு கவுன்சிலர் கூட இந்த வீட்டில் வசிக்க மாட்டார். நம் பிரதமரை எண்ணி நாம் பெருமைகொள்வோம். இது மாதிரியான தேசியத்திற்கென தன்னை அர்பனிப்பவரை நம் தமிழ் நாட்டில் கால் பதிக்க விட மாட்டார்களாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட கட்சியினர் மட்டும் நாட்டுக்காக சிறிய வீடுகளில் வசித்து தியாகம் செய்வது போன்று பதிவிட்டுள்ளனர். தங்கள் கட்சியின் தலைவர், மாநிலத் தலைவர் எல்லாம் ஏதோ குடிசை வீட்டில் வசிப்பது போலவும், தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மட்டும் பங்களாக்களில் வசிப்பது போலவும் பதிவிட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி 2022ம் ஆண்டு டிசம்பரில் காலமானார். அவர் இயற்கை எய்தும் வரை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தன் தாயாரை சந்திக்க சென்று வந்தார். இது தொடர்பாக பல வீடியோக்கள் உள்ளன. அந்த வீட்டுக்கும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள வீட்டுக்கும் துளி கூட தொடர்பில்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2022ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இந்த வீடியோவை யூடியூபர் ஒருவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் இது குஜராத் மாநிலம் வாட் நகரில் உள்ள பிரதமர் மோடியின் வீடு என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்களிலும் இந்த வீட்டை வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தனர். அதில் பிரதமர் மோடி இளம் வயதில் தன்னுடைய சகோதரர்களுடன் வசித்த வீடு என்று குறிப்பிட்டிருந்தனர்.

பிரதமர் பதவியை ஏற்ற பிறகு நரேந்திர மோடியின் தாயார் இந்த வீட்டில் வசித்தாரா என்று தேடிப் பார்த்தோம். நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது தன்னுடைய பிறந்த நாள் அன்று காந்திநகரில் வசித்த தன் தாயிடம் ஆசி பெற வந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. இதன் மூலம் நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போதே அவரது தாயார் காந்தி நகருக்கு வந்துவிட்டது உறுதியாகிறது.

அவர் வாட்நகரில் உள்ள சிறிய வீட்டில் இல்லை. அதே போல் நரேந்திர மோடி பிரதமரான பிறகில் இருந்து, ஹீராபென் 2022 டிசம்பரில் காலமான வரையிலும் வாட் நகர் வீட்டில் வசிக்கவில்லை. இதை எல்லாம் நரேந்திர மோடி தன் தாயாரை சந்திக்கச் சென்றபோது எடுத்த வீடியோக்கள் உறுதி செய்கின்றன.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ, நரேந்திர மோடி இளம் வயதில் வாழ்ந்த வீடுதான். நரேந்திர மோடி இளம் வயதில் வசித்த வீடு என்று குறிப்பிட்டிருந்தால் அது சரியானதாக இருக்கும். பிரதமர் மோடியின் தயார் வசித்த வீடு என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம், மோடி பிரதமரான பிறகும் அவரது தாயார் வசித்த வீடு என்பது போல பதிவிட்டுள்ளனர். இப்படி உண்மையில்லாத விஷயத்தை வைத்து மற்ற தலைவர்களை, அரசியல்வாதிகளை வசைபாடியிருப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது.

முடிவு:

நரேந்திர மோடி பிரதமரான பிறகு அவரது தாயார் வசித்த வீடு என்று பரவும் தகவல் உண்மையில்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் வசித்த வீடு என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Misleading