
‘’விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

வட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் தொடங்கியது, என்று கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். எனவே, பலரும் இதனை தற்போது நிகழ்ந்த உண்மை சம்பவம் என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ உண்மையா என்ற சந்தேகத்தில் அதனை ஒருமுறை கவனமாக பார்வையிட்டோம். அப்போது, அதில், ஒடியா மொழியில் உள்ள எழுத்துகள் தென்பட்டன.

எனவே, இந்த வீடியோ ஒடிசா மாநிலத்தில் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில் வித விதமான கீவேர்ட் பயன்படுத்தி தகவல் தேடியபோது, இது கடந்த 2018ம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பானது என்ற விவரம் கிடைத்தது.
ஆனாலும், இது பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற வன்முறை தாக்குதல் என்று மேற்கண்ட யூடியுப் லிங்கில் குறிப்பிட்டுள்ளனர்.
இது உண்மையிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த போராட்டமா என்றால், இல்லை என்பதுதான் உண்மை.
ஆம், ஒடிசா மாநிலம், புரி நகரில் உள்ள ஹாஸ்பிடல் ஸ்கொயர் பகுதியில் அமைந்திருக்கும் பெட்ரோல் நிலையத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறைவான அளவில் பெட்ரோல் விநியோகித்ததாக எழுந்த புகாரின்பேரில், உள்ளூர் மக்கள் அந்த பெட்ரோல் நிலையத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த வீடியோ 2018ம் ஆண்டிலேயே தவறான தகவலுடன் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. அதனை அப்படியே உண்மை என நம்பி, தற்போது நிகழ்ந்தது போலக் கூறி, மறுபகிர்வு செய்து வருகின்றனர் என்று நமது ஆய்வில் தெளிவாக தெரியவருகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி தெரியவந்த உண்மையின் விவரம்,
1) கடந்த 2018ம் ஆண்டு ஒடிசாவில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான வீடியோவை தற்போது நிகழ்ந்ததாகக் கூறி மறுபகிர்வு செய்துள்ளனர்.
2) பெட்ரோல் அளவை குறைத்து விநியோகித்த புகாரின்பேரில், ஒடிசா மாநிலம், புரி பகுதியில் பெட்ரோல் நிலையத்தை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், இதற்கும் தொடர்பில்லை.
3) இதுபற்றி அப்போதே ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தாலும், மீண்டும் சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி பழைய வீடியோவை புதியதுபோல பகிர்ந்து வருவதாக, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் தகவல்களுக்கு எமது வாட்ஸ் ஆப் எண்ணை (+91 9049044263) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள்; முழு விவரம் இதோ…
Fact Check By: Pankaj IyerResult: False
