
சசிகலாவின் 2000 கோடி ரூபாய் சொத்து முடக்கம் செய்தியை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் வெளியிட வைத்தார் என்று நக்கீரனில் செய்தி வெளியானது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
வாசகர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் செய்தியின் உண்மை நிலையை கண்டறிய உதவும் ஃபேக்ட் கிரஸண்டோவின் சாட் பாட்டுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் படத்துடன் பதிவு ஒன்று ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போல அந்த புகைப்படம் இருந்தது.
அதில், “சசிகலாவின் 2000 கோடி சொத்துக்கள் முடக்கம் என்று வேணுமென்றே ஊடகங்களுக்கு பணம் கொடுத்து போட சொல்லி இருக்கிறார் எடப்பாடி – நக்கீரன் பத்திரிகை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதே போன்ற பதிவு ஃபேஸ்புக்கில் பரவி வருகிறதா என்று பார்த்தோம். அப்போது, சேலம் கலைவாணி என்பவர் 2020 அக்டோபர் 13ம் தேதி இதை வெளியிட்டிருந்தார். பலரும் இது போன்று ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சசிகலாவின் ரூ.2000ம் கோடி மதிப்புடைய சொத்துக்கள் பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டதாக செய்தி வெளியானது. தமிழ், ஆங்கிலம், இந்தி என எல்லா ஊடங்கங்களிலும் அந்த செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது பற்றி எந்த தகவலையும் அவர்கள் அதில் வெளியிடவில்லை. வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன என்ற அளவிலேயே அந்த செய்திகள் இருந்தன.

அசல் பதிவைக் காண: indiatoday.in I Archive 1 I dinamalar.com I Archive 2
இந்த நிலையில் சசிகலா பற்றி ஊடகங்களுக்கு பணம் கொடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தி போட வைத்துள்ளார் என்று நக்கீரன் செய்தி வெளியிட்டது போன்று பதிவு பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

நக்கீரன் செய்தி வெளியிட்டதா என்று முதலில் ஆய்வு செய்தோம். அவர்கள் பக்கத்தில் அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை. சசிகலாவின் ரூ.2000ம் கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கம் பற்றிய செய்தி 2020 அக்டோபர் 7ம் தேதி வெளியாகி இருந்தது.

அசல் பதிவைக் காண: nakkheeran.in I Archive
நக்கீரன் இணையதளத்தில் முடக்கம் பற்றிய செய்தி மட்டுமே இருந்தது. இதன் பின்னணி பற்றி எந்த செய்தியும் இல்லை. அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகு வெளியான நக்கீரன் இதழைப் பார்த்தோம். அதிலும் கூட சசிகலா சொத்து முடக்கம் பற்றிய செய்தி வெளியானதற்கு எடப்பாடி பழனிசாமி பணம் கொடுத்தது தான் காரணம் என்று எந்த தகவலும் இல்லை.
எனவே, நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தை (044 4399 3000) தொடர்புகொண்டு விசாரித்தோம். செய்திப் பிரிவு நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது நக்கீரன் செய்தி வெளியிட்டதாக பரவும் விஷயத்தை விவரித்தோம். அதன் பிறகு ஒரு முறை சரி பார்த்துவிட்டு அழைப்பதாக கூறினர்.
அதன் பிறகு நம்மைத் தொடர்புகொண்ட நக்கீரன் இதழின் செய்திப் பிரிவு நிர்வாகி, “சசிகலாவில் ரூ.2000ம் கோடி சொத்து முடக்கம் பற்றிய செய்தியை மட்டுமே நாங்கள் வெளியிட்டோம். அதை நாங்கள் மட்டுமின்றி எல்லா ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. எடப்பாடி பழனிசாமிதான் பணம் கொடுத்து அந்த செய்தியை வெளியிட்டார் என்ற செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. சமூக ஊடகங்களில் பகிரப்படும் அந்த பதிவை நாங்களும் பார்த்தோம். அது போலியானது. நாங்கள் அப்படி எதையும் வெளியிடவில்லை” என்றனர்.
சசிகலாவின் சொத்து முடக்கம் பற்றிய செய்தி வெளியானதன் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்று செய்தி வெளியிடவில்லை என்று நக்கீரன் பத்திரிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், குறிப்பிட்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சசிகலா பற்றி செய்தி வெளியிட வைத்த எடப்பாடி பழனிசாமி- நக்கீரன் பெயரில் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
