அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "விரைவில் விலை குறையும். அயோத்தியில் ஶ்ரீராமபெருமானின் திருக்கோயில் கட்டி முடித்ததும் தக்காளி உள்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Panchanathan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 1ம் தேதி பதிவிட்டுள்ளார்.

Archive

படித்த பைத்தியம் என்று குறிப்பிட்டு ட்விட்டரில் நாகப்பட்டினத்தான் ❁ என்ற ஐடி கொண்டவர் இதை பகிர்ந்திருந்தார். இதை பலரும் ரீட்வீட் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்துகொண்டே செல்கிறது. ராமர் கோவில் கட்டினால் விலை குறைந்துவிடும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பலரும் நியூஸ் கார்டை பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் பார்ப்பதற்கு, கிட்டத்தட்டத் தந்தி டிவி வெளியிட்டது போல் உள்ளது. இருப்பினும் "விரைவில் விலை குறையும்" என்ற தலைப்பு பகுதி தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. மேலும், நிதியமைச்சராக இருப்பவர் இப்படி கூற வாய்ப்பு மிகக் குறைவு என்பதால் இது போலியானது என்று தெளிவாகத் தெரிந்தது. அதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில் நிர்மலா சீதாராமன் இப்படி ஏதும் கூறினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். கூகுள் தேடலில் தக்காளி விலை உயர்வு பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து என டைப் செய்து தேடினோம். நமக்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லை. நிர்மலா சீதாராமன் கருத்து கூறியிருந்தால் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருக்கும். குறைந்தபட்சம் பாஜக எதிர்ப்பு ஊடகங்களிலாவது வெளியாகி இருக்கும். ஆனால், எந்த செய்தியும் கிடைக்காதது, இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்தது.

அடுத்து தந்தி டிவி இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். 2023 ஜூலை 1 அன்று நிர்மலா சீதாராமன் தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

முடிவு:

ராமர் கோவில் கட்டி முடித்தால் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False